ADDED : ஜூலை 12, 2026 03:31 AM
தலைமை மருந்தாளுநர் பதவிக்கு நான் முழுத்தகுதியுடனும் இருந்தேன். இடமும் காலியாகத்தான் இருந்தது. இது குறித்து கடந்த ஓராண்டாகவே முறைப்படி விண்ணப்பித்து, அலைக்கழிக்கப்பட்ட கதையைச் சொன்னால் உங்கள் மனம் கனத்துப் போகும். மே மாதம் கோப்பு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரி மட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள், ஏனோ கடைசிவரை காகிதங்களிலேயே தேங்கி நின்றன.
என் கூடவே பணியாற்றும் சக நண்பர்கள், என் உரிமையை மீட்க காலை முதல் இரவு 7 மணி வரை அலுவலகங்களாக ஏறி இறங்கினார்கள். அவர்கள் அவ்வளவு கஷ்டப்பட்டு ஆவணங்களைச் சரிபார்த்து ஒப்படைத்தும், அதிகார வர்க்கத்தின் மெத்தனப் போக்கினால் அந்த கோப்பு இழுத்தடிக்கப்பட்டது.
கடைசியில் என்ன நடந்தது தெரியுமா..ஜூன் 30-ம் தேதி, நான் அரசுப் பணியிலிருந்து விடைபெற வேண்டிய கடைசி நாள்... என் வாழ்நாளின் மிக முக்கியமான நாள்... அன்றைய தினம் மாலை 4.10 மணிக்குத்தான் அந்தக் கோப்பு மின்னணு முறையில் அனுப்பப்படுகிறது!
மாலை 6 மணிக்கு நான் பணி ஓய்வு பெற வேண்டும். அதற்கு முன்னதாக இயக்குநர், சார்புச் செயலர், செயலர், தலைமைச் செயலர் என அத்தனை அடுக்குகளையும் தாண்டி, முதல்வரின் ஒப்புதல் பெற்று, அரசாணையாக அது வெளிவருவது நடைமுறையில் சாத்தியமா..இது தெரியாதா அவர்களுக்கு.. அல்லது, இது நடக்காது என்று தெரிந்தேதான், என் வாழ்நாள் கனவைச் சிதைக்க வேண்டுமென்றே இப்படிச் செய்தார்களா.. விடை தெரியாத இந்த கேள்விதான் இப்போது என் துாக்கத்தைத் தொலைக்கச் செய்கிறது.
39 ஆண்டுகள் எந்தக் களங்கமும் இல்லாமல், நேர்மையின் வழி நின்று உழைத்த ஒரு அரசு ஊழியனுக்குக் கிடைத்த பரிசு இதுதானா.. இது வெறும் பதவி உயர்வு இழப்பு அல்ல. என் நேர்மையான உழைப்புக்கு நிர்வாகம் செய்த துரோகம். என் வாழ்நாள் கனவு என் கண் முன்னே நசுங்கிப் போன அந்த வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.
கவர்னர் ஐயா, நான் இழந்த பதவி மீண்டும் கிடைக்கப்போவதில்லை. ஆனால், இனி எந்தவொரு மருந்தாளுநருக்கும், எந்தவொரு அரசு ஊழியருக்கும் இதுபோன்றதொரு கொடூரமான அனுபவம் ஏற்படக்கூடாது. தகுதியுள்ள ஒருவனின் நியாயமான உரிமையை, அதிகாரிகளின் அலட்சியப் போக்கு இப்படித் தட்டிப் பறிப்பது என்பது இந்த நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையையே குலைத்துவிடும்.
ஒரு அரசு ஊழியனின் உழைப்பை, அவன் ஓய்வு பெறும் நாளிலாவது மதிக்கப்பட வேண்டும்.என் வாழ்நாள் கனவு கலைந்துபோனது உண்மைதான்... ஆனால், இனி வரும் காலத்திலாவது இந்தச் சூழல் மாற வேண்டும் என்பதே என் இறுதி வேண்டுகோள்.
