கூனிச்சம்பட்டு மார்க்கெட் கமிட்டியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா
கூனிச்சம்பட்டு மார்க்கெட் கமிட்டியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா
ADDED : ஏப் 14, 2026 06:56 PM
புதுச்சேரி: கூனிச்சம்பட்டு மார்க்கெட் கமிட்டியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
புதுச்சேரி, கூனிச்சம்பட்டு கிராமத்தில் அரசு மார்க்கெட் கமிட்டி செயல்பட்டு வருகிறது. இங்கு, திருக்கனுார், மண்ணாடிப்பட்டு, கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு மற்றும் தமிழகப் பகுதியான மதுரப்பாக்கம், ஐவேலி, பொம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மணிலா, உளுந்து, காராமணி, நெல் உள்ளிட்ட விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்கள் இடம் பற்றாக்குறை காரணமாக, வெளியே வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மார்க்கெட் கமிட்டியில் விளை பொருட்களை வைப்பதற்கு அமைக்கப்பட்ட கொட்டகைகள் சேதமடைந்து எந்நேரத்திலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது.
இதற்கிடையே, மார்க்கெட் கமிட்டிக்கு காலையில் வரும் விவசாயிகள், வியாபாரிகள் வந்து விலை நிர்ணயம் செய்யும் வரை கமிட்டியிலேயே காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால், கமிட்டியில் காத்திருக்கும் விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்டவை ஏற்படுத்தப் படவில்லை.
இதனால், மார்க்கெட் கமிட்டிக்கு வரும் விவசாயிகள் மற்றும் பெண்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, கூனிச்சம்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், விளை பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு இடவசதியும் ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
