/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுவேலிகள் களவாடப்பட்டு மீண்டும் அலங்கோலமான வேல்ராம்பட்டு ஏரி கிரண்பேடி வழியில் கவர்னர் கைலாஷ்நாதன் களம் இறங்குவாரா
/
சுற்றுவேலிகள் களவாடப்பட்டு மீண்டும் அலங்கோலமான வேல்ராம்பட்டு ஏரி கிரண்பேடி வழியில் கவர்னர் கைலாஷ்நாதன் களம் இறங்குவாரா
சுற்றுவேலிகள் களவாடப்பட்டு மீண்டும் அலங்கோலமான வேல்ராம்பட்டு ஏரி கிரண்பேடி வழியில் கவர்னர் கைலாஷ்நாதன் களம் இறங்குவாரா
சுற்றுவேலிகள் களவாடப்பட்டு மீண்டும் அலங்கோலமான வேல்ராம்பட்டு ஏரி கிரண்பேடி வழியில் கவர்னர் கைலாஷ்நாதன் களம் இறங்குவாரா
ADDED : ஜூன் 28, 2025 11:55 PM

வேல்ராம்பட்டு ஏரியின் சுற்றுவேலிகள் களவாடப்பட்டு பொலிவிழந்து வருகின்றது. ஏரியில் குப்பை கொட்டுவதை தடுக்காவிட்டால் மீண்டும் கூவமாக மாறிவிடும். புதுச்சேரியின் வேல்ராம்பட்டு ஏரி, 165 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. முதலியார்பேட்டை மற்றும் கொம்பாக்கம் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர முக்கிய நீர்நிலையாக இருந்து வருகிறது.
ஆனால், ஏரி சரிவர பராமரிக்கப்படவில்லை. கடந்த 2016 வரை, இந்த ஏரியின் நிலை படு மோசமாக இருந்தது. அப்போதைய, கவர்னர் கிரண்பேடி முயற்சியால் ரூ. 75 லட்சம் செலவில் சுற்றுவேலி, தார் சாலை அமைக்கப்பட்டு, புத்துயிர் பெற்றது. அத்துடன் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாகவும் அறிவிக்கப்பட்டது. சுற்றுலா படகு சவாரியும் விடப்பட்டது. கவர்னர் கிரண்பேடி சென்ற பிறகு, மீண்டும் வேல்ராம்பட்டு ஏரி சரிவர பராமரிக்கப்படவில்லை. ஏரி அழகு இழந்து அலங்கோலமாகிவிட்டது.
இப்போது ஏரியை சுற்றிலும் போடப்பட்டு இருந்த சுற்றுவேலிகளும் களவாடப்பட்டு எந்த பக்கத்தில் இருந்தும் ஏரிக்குள் நுழையும் அளவிற்கு மீன் பிடிக்கவும், பறவைகளை வேட்டையாடவும் திருட்டுவழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், மீண்டும் குப்பைகள் கொட்டும் இடமாகவும், திறந்தவெளி கழிப்பிடமாகவும் மாறி விட்டது. ஏரியில் குப்பை கொட்டுவதை தடுக்காவிட்டால் மீண்டும் கூவமாக மாறிவிடும்.
மற்றொரு பக்கம், ஏரியின் எதிரியாக ஆகாயதாமரையும் படர்ந்து பொலிவு இழந்து வருகிறது. குறிப்பாக ஏரி வாய்க்காலில் ஆகாயதாமரை படர்ந்துள்ளன. இவை அப்படியே வேல்ராம்பட்டு ஏரியில் மெல்ல படர்ந்து பழையபடி, பொலிவு இழக்கும் அபாயம் ஏற்பட்டது. கவர்னர் கிரண்பேடி வழியில் தற்போதைய கவர்னர் கைலாஷ்நாதனும் தற்போது புதுச்சேரியின் நீர்நிலைகள் மீது தனி கவனம் செலுத்தி வருகின்றார். புதுச்சேரியின் நீர்வளத்தை பாதுகாக்கவும் செயல்திட்டங்களை ரெடி செய்து வருகிறார். கிரண்பேடி வழியில் கவர்னர் கைலாஷ்நாதனும் வேல்ராம்பட்டு ஏரியை மீட்டெடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.