/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அன்னதான திட்டம் மாற்று இடத்தில்.... செயல்படுமா?ஜோஸ் சார்லஸ் மார்டின் கவனிப்பாரா
/
அன்னதான திட்டம் மாற்று இடத்தில்.... செயல்படுமா?ஜோஸ் சார்லஸ் மார்டின் கவனிப்பாரா
அன்னதான திட்டம் மாற்று இடத்தில்.... செயல்படுமா?ஜோஸ் சார்லஸ் மார்டின் கவனிப்பாரா
அன்னதான திட்டம் மாற்று இடத்தில்.... செயல்படுமா?ஜோஸ் சார்லஸ் மார்டின் கவனிப்பாரா
UPDATED : மே 07, 2026 11:33 PM
ADDED : மே 07, 2026 11:22 PM
புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலக அன்னதான திட்டத்தை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்காத வகையில், மாற்றி அமைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் வெங்கட்டா நகர் பூங்காவையொட்டி அமைந்துள்ளது. ஏற்கனவே காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ., வாக இருந்த ஜான்குமார் இந்த அலுவலகத்தில் அன்னதானம் திட்டத்தை துவங்கினார்.
இப்போது, காமராஜர் தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோஸ் சார்லஸ் மார்டினும் அதே பாணியில் மீண்டும் அன்னதானம் வழங்கப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதை கேட்கும் பொதுமக்களுக்கும், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
காமராஜர் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் மிக முக்கியமான 45 அடி சாலையில் உள்ளது. எந்த நேரமும் இங்கு போக்குவரத்து பிசியாக இருக்கிறது. ஏற்கனவே அன்னதான திட்டம், துவங்கியது பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். குறிப்பாக வாகன ஓட்டிகள் கடும் நெரிசலில் சிக்கி தவித்தனர்.
மதிய நேரங்களில் உணவருந்த வருவோரின் கூட்டம் சாலையை ஆக்கிரமித்து நிற்கிறது. வாகனங்களை சாலையின் ஓரம் தாறுமாறாக நிறுத்திவிட்டுச் செல்வதால், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத அளவிற்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது மீண்டும் அதே பாணியில் அன்னதானம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்னதான திட்டத்தில் மீதமாகும் உணவினால் அப்பகுதியில் நாய்தொல்லை அதிகரித்துவிட்டது. கும்பல் கும்பலாக சுற்றி திரிகின்றன. பூங்காவில் பொதுமக்களை துரத்தி கடிக்க பாய்கின்றன. இது வாக்கிங் செல்வோர்களை அச்சமடைய செய்துள்ளது.
இப்பகுதியில் இரவு நேரங்களில் எலி தொல்லையும் உச்சக்கட்டத்தில் உள்ளது. வெங்கட்டா நகர் பூங்காவையொட்டி எம்.எல்.ஏ., அலுவலகத்தை சுற்றிலும் மைதானத்தை எலிகள் குதறிபோட்டு வருகின்றன.
உணவு கிடைப்பதால் புதுச்சேரி முழுதும் உள்ள பிச்சைக்காரர்கள் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். சாப்பிட்ட பிறகு வெங்கட்டா நகர் பூங்காவிலேயே படுத்து துாங்குகின்றனர். அங்கேயே சிறுநீர், இயற்கை உபாதைகள் கழித்து அசுத்தமாக்குகின்றனர். இதனால் பூங்காவின் துாய்மையும் கேள்விக்குறியானது. பசியார உணவு வழங்குவது என்பது உன்னதமான காரியம். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதனை மக்கள் நெருக்கம் மிகுந்த ஒரு பிரதான சாலையில் வைத்து நடத்துவதுதான் சிக்கலை உருவாக்குகிறது.
அன்னதானம் வழங்குவதில் யாருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அது பொதுமக்களுக்கோ, போக்குவரத்துக்கோ இடையூறாக இருக்கக் கூடாது. ஊருக்கு வெளியே ஒரு மண்டபத்தையோ அல்லது தனியிடத்தையோ வாடகைக்கு எடுத்து வருடம் முழுதும் தாராளமாக அன்னதானம் வழங்கலாம். இதற்குத் தேவையான வசதி வாய்ப்புகள் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு நிச்சயமாக இருக்கிறது. அப்படி செய்தால் அனைவருமே வாழ்த்தி வரவேற்பர்.
போக்குவரத்து நெரிசலிலும், சுகாதாரச் சீர்கேட்டிலும் விழிபிதுங்கி நிற்கும் புதுச்சேரி மக்களின் கஷ்டத்தை உணர்ந்து, அன்னதானத் திட்டத்தைச் சரியான முறையில், மாற்று இடத்தில் செயல்படுத்த ஜோஸ் சார்லஸ் மார்டின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

