ADDED : டிச 15, 2024 06:06 AM
தனியார் நிறுவனங்கள் பொழுதுபோக்கு சாதனங்கள் அமைத்து கொள்ளை லாபம் ஈட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி வந்த நடிகை நயன்தாராவின் கணவரான சினிமா இயக்குநர் விக்னேஷ் சிவன், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சட்டசபையில் சந்தித்து பேசினார்.
அப்போது, புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறையின் சீகல்ஸ் உணவகத்தை விலைக்கு கேட்டார். அதிர்ச்சி அடைந்த அமைச்சர் லட்சுமிநாராயணன், அது அரசு சொத்து, அங்கு அரசு ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். அதனை விற்பனை செய்ய முடியாது என கூறினார்.
இதனால், கடற்கரை ஏதேனும் ஒன்றை கொடுத்தால் அங்கு சுற்றுலா மேம்பாடு செய்வதாக கேட்டார். பல ஆண்டிற்கு முன்பே தனியாரிடம் ஒப்பந்தம் அடிப்படையில் கொடுக்கப் பட்டு விட்டது என கூறியதால், இசை நிகழ்ச்சி நடத்தும் பழைய துறைமுக வளாக திறந்தவெளி மைதான பகுதியை பார்வையிட்டு புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், ஏ.எப்.டி.மில் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அரசாங்கத்தால் ஏ.எப்.டி., மில் நடத்த முடியவில்லை என்றால் என்னிடம் தாருங்கள். அதனை நான் நடத்தி வருவாய் ஈட்டி தருகிறேன், மில் மற்றும் தொழிலாளர்களுக்கான நிலுவை தொகையையும் சேர்த்து ஒரே நாளில் தருகிறேன் என, கூறினார்.
இதனைக் கேட்ட பொதுமக்கள், புதுச்சேரி விற்பனைக்கு என யாரேனும் அறிவிப்பு பலகை வைத்துள்ளார்களா என கேள்வி எழுப்புகின்றனர்.
புதுச்சேரிக்கு வருபவர்கள் எல்லாம், அரசு ஓட்டலை விலைக்கு தாருங்கள், ஏ.எப்.டி., மில்லை தாருங்கள் என விலைக்கு கேட்கின்றனரே என ஆதங்கப்பட்டு வருகின்றனர்.
