ADDED : நவ 11, 2024 07:35 AM

புதுச்சேரி, : புதுச்சேரியில் அஞ்சல் துறை சார்பில் நடந்த பெண்கள் குழுவின் 'பைக்' விழிப்புணர்வு பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்திய அளவில் கடிதம் எழுதுவதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், அஞ்சல்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது டில்லி அஞ்சல்துறை இயக்குனர் திஷா பண்ணு தலைமையில் மொத்தம், 16 பெண்கள் குழுவாக, 'டாய் அக்ஹார் பைக் ரேலி' எனும் பெயரில், இந்தியா முழுவதும் 'பைக்' விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இந்த குழுவினர் நேற்று புதுச்சேரி, ஆரோவில் வந்தனர். அங்குள்ள அஞ்சலகத்தில் கடிதம் எழுதுதல் சம்மந்தமாக, ஊழியர்களை சந்தித்து பேசினர்.
இதையடுத்து கடற்கரை சாலை, காந்திசிலை அருகில் மாலை 4:00 மணிக்கு, புதுச்சேரி ஹார்ட் சிவில் விமானத்துறை பயிற்சி பள்ளி மாணவர்கள், நிறுவனர் சக்திவேல், தாளாளர் விஜயலட்சுமி ஆகியோருடன் கலந்துரையாடினர். டிஜிட்டல் யுகத்தில் கடிதம் எழுதுவதின் மகிழ்ச்சி குறித்து ஆழமாக எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்வில், புதுச்சேரி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இனக்கொல்லு காவியா வரவேற்றார். இதில் ஒலந்தரை பொதுநல அமைப்பை சேர்ந்த மாணவர்கள், பால் ஆன்டனி தலைமையில் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை, உதவி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகன் ஏற்பாடு செய்தார்.
