ADDED : ஏப் 21, 2026 06:21 PM

புதுச்சேரி: கைக்கிலப்பட்டில் கனமழையின்போது நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்ததன் எதிரொலியாக ஏரி துார்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வங்க கடலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரி மற்றும் அதனை சுற்றிலுள்ள கிராமப் புறங்களில் தொடர் கனமழை பெய்தது. இதனால், கிராமப்புறங்களில் உள்ள பல்வேறு ஏரிகள் மற்றும் நீர்வரத்து வாய்க்கால்கள் நிரம்பியது.
இதற்கிடையே, திருக்கனுார் அடுத்த கைக்கிலப்பட்டு ஏரியில் அமைக்கப்பட்டுள்ள மதகுகள் போதிய பராமரிப்பு இன்றி சேதமடைந்து, அடைப்பு ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக ஏரியில் நிரம்பிய தண்ணீர் வெளியேற வழியின்றி அருகிலுள்ள விவசாய நிலங்களில் தேங்கி, அங்கு பயிரிடப்பட்டிருந்த 200 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் முழுதும் தண்ணீர் மூழ்கி சேதமடைந்தன.
இதையடுத்து, அப்பகுதி விவசாயிகள், கைக்கிலப்பட்டு ஏரியை உடனடியாக துார்வாரி சேதமடைந்துள்ள மதகுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கை எதிரொலியாக, பொதுப்பணித் துறை நீர்பாசன பிரிவு மூலம் ரூ. 33.43 லட்சம் மதிப்பில் ஏரி துார்வாரும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது.
அதில், ஏரிக்கரைகளை பலப்படுத்துதல், ஏரியில் உள்ள மதகுகளை சீரமைத்தல், ஏரியை துார்வாரி ஆழப்படுத்துதல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடிக்கடி பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
