தேர்தலையொட்டி ஓட்டுச்சாவடி தயார் செய்யும் பணிகள் தீவிரம்
தேர்தலையொட்டி ஓட்டுச்சாவடி தயார் செய்யும் பணிகள் தீவிரம்
ADDED : மார் 21, 2026 09:58 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டசபை தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடிகளை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் வரும் 9ம் தேதி, நடக்கிறது. புதுச்சேரியில் மொத்தம் 1,099 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 18 ஓட்டுச் சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. 115 ஓட்டுச் சாவடிகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. தேர்தல் பணிக்காக 4,934 ஊழியர்கள், 5,410 போலீசார் தேர்தல் பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் மேஜை, நாற்காலிகள், உதவி மையம், மின்சாரம், மாற்றுத்திறனாளிகள் செல்லும் சாய்வு பாதை, கழிப்பறை வசதி, குடிநீர், நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என, தேர்தல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பெண்களுக்கு என தனி ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஒவ்வொறு சட்டசபை தொகுதிக்கு ஒன்று வீதம், மொத்தம் 30 மகளிர் ஒட்டுச்சாவடிகள், இளைஞர்கள் நிர்வகிக்கும் ஓட்டுச்சாவடிகள் புதுச்சேரியில் - 3, காரைக்காலில் -2 என மொத்தம் 5 ஓட்டுச்சாவடிகள், அனைத்து மாற்றுத்திறனாளிகள் நிர்வகிக்கும் ஓட்டுச்சாவடிகள் புதுச்சேரியில் 2, காரைக்காலில் 1 என, 3 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதுச்சேரியில் மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளும், தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், சீரமைக்கப்பட்ட ஒட்டுச்சாவடிகளில் பெயிண்ட் அடிக்கும் பணி, மும்முரமாக நடந்து வருகிறது.
