ADDED : ஆக 30, 2025 12:18 AM
புதுச்சேரி: சாரம் அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கிய வெளிமாநில தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வேலுார் மாவட்டம், ராணிப்பேட்டை, பரிதுபுத்துாரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சுபாஷ், 21; சாரம் கட்டும் வேலையை செய்து வந்தார். இவர், கடந்த 13ம் தேதி மேஸ்திரி ஆனந்தன் கூறியதன் பேரில், புதுச்சேரி, சாரம், 45 அடி சாலையில் நடந்து வரும் தனியார் நிறுவன கட்டுமான பணிக்காக சாரம் அமைக்க நடேசன், மகேஷ் ஆகியோருடன் புதுச்சேரி வந்தார்.
கடந்த 20ம் தேதி சுபாஷ் தனியார் நிறுவன கட்டுமான பணிக்காக சாரம் அமைத்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி 16 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்து அவரது தாய் நிர்மலா தன்வந்தரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சாரம் அமைக்கும் பணிக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து தராமல் வேலை வாங்கியதாக தனியார் நிறுவன உரிமையாளர் சங்கர் நாராயணன், இன்ஜினியர் விவேக் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.