ADDED : அக் 26, 2024 06:18 AM

வில்லியனுார்: உலக ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு புதுச்சேரி ஆயுர்வேத மருத்துவ இயக்குனரகம் சார்பில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி வில்லியனுாரில் நேற்று நடந்தது.
ராஜிவ்காந்தி ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் மற்றும் சங்கர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி வில்லியனுார் ஆயுஷ் மருத்துவ மனையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார்.
பேரணி வில்லியனுார் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆயுஷ் மருத்துவமனையை வந்தடைந்தது.
பேரணியில் ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்புகள் குறித்த பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ஆயுர்வேத மருத்துவ முகாம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஆயுர்வேத நோடல் அதிகாரி டாக்டர். பத்மாவதம்மா, இயக்குனர் டாக்டர் ஸ்ரீதரன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் இந்திரா, ஆயுஷ் மருத்துவமனை ஆர்.எம்.ஓ., டாக்டர். பிரசன்னலட்சுமி, ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். ஜீவாஆனந்த், சங்கரா வித்யாஸ்ரமம் பள்ளி முதல்வர் சுகந்தி, ஆசிரியர் கணேஷ் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
