/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உணவில் ஓடி விளையாடும் புழுக்கள் 'நாக் அவுட்' ஆகும் விளையாட்டு வீரர்கள்
/
உணவில் ஓடி விளையாடும் புழுக்கள் 'நாக் அவுட்' ஆகும் விளையாட்டு வீரர்கள்
உணவில் ஓடி விளையாடும் புழுக்கள் 'நாக் அவுட்' ஆகும் விளையாட்டு வீரர்கள்
உணவில் ஓடி விளையாடும் புழுக்கள் 'நாக் அவுட்' ஆகும் விளையாட்டு வீரர்கள்
ADDED : மார் 01, 2026 04:59 AM
புதுச்சேரி: வீரர்களின் உடலை வலுப்படுத்த வேண்டிய சாய் உணவகத்தில், சுகாதாரம் 'நாக் அவுட்' ஆகியுள்ளதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாட்டில் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், உட்கட்டமைப்பை உருவாக்கவும் இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் 1984ல் நிறுவப்பட்டது. மிக உயர்ந்த தேசிய விளையாட்டு அமைப்பான இது, சாய் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்திலும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தனது கிளையை விரித்துள்ளது.
லாஸ்பேட்டை தாகூர் கல்லுாரி வளாகத்தில் பத்து ஆண்டுகளாக இயங்கும் இந்த மையம், பல மாவட்டங்களிலிருந்து வரும் இளம் வீரர்களின் கனவுகளை வடிவமைக்கும் பயிற்சி மையமாக திகழ்கிறது.
இங்கு பயிற்சி பெறும் வீரர்கள் காலை சூரியனை விட முன்பே எழுந்து, மைதானத்தில் ஓடி, தன்னம்பிக்கையைச் சுவாசித்து, தேசிய அளவில் புதுச்சேரி பெயரை உயர்த்த வேண்டும் என, முயற்சி செய்கின்றனர்.
ஆனால், அந்த கனவுகளை சிதைக்கும் வகையில் மோசமான உணவு வழங்கப்படுவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீரர்களுக்காக தயார் செய்யப்படும் கோதுமை மாவில் புழுக்கள் நெளிகின்றன. அரிசியில் புழுக்கள் விளையாடுகின்றன. உணவு சமைக்கப் பயன்படும் தண்ணீரில்கூட புழுக்கள் வரிசையாக வருகின்றன என, விளையாட்டு வீரர்கள் மனம் குமுறி வருகின்றனர்.
இந்த விவகாரம் அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் பரவ, அவைகளும் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றன. தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'வீரர்களுக்கு தரப்படும் உணவு அவர்களின் பலமாக இருக்க வேண்டுமே அன்றி, பாதிப்பாக இருக்கக்கூடாது. ஆனால் உணவில் புழுக்கள் நெளிகின்றன. அதை கண்டு கொள்ளாமல் சமைத்தும், சாப்பிட சொல்லியுள்ளனர். விளையாட்டு வீரர்களின் ஆரோக்கியத்துடன் விளையாடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும், தட்டிக்கேட்கும் வீரர்கள், ஊழியர்களால் மிரட்டப்படுவதை அனுமதிக்க முடியாது. இதனால் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். வெற்றிக்காக உடலை வலுவாக்கும் இளம் வீரர்களுக்கு, வயிற்றை வலிக்கச் செய்யும் புழுக்கள் தான் உணவா.. இதற்கு காரணமாக அதிகாரிகள் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மத்திய அரசு நிறுவனமான சாய் வளாகத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டு கவர்னர் கைலாஷ்நாதன் நேரடியாக தலையிட்டு உண்மை நிலையை ஆராய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

