ADDED : ஏப் 24, 2026 11:27 PM
புதுச்சேரி: பாண்டி மெரினாவில் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 'புள்ளிங்கோ பாய்ஸ்' வாலிபரை போக்குவரத்து போலீசா் கைது செய்தனர்.
உப்பளம், திப்புராயப்பேட்டையில் பாண்டி மெரினா கடற்கரை அமைந்துள்ளது. இங்கு, ஓட்டக சவாரி, கேளிக்கை விடுதி, படகு சவாரி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கடைகள், உணவு விடுதிகளும் உள்ளன. இதனால், பாண்டி மெரினா கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
இதற்கிடையே, பாண்டி மெரினா கடற்கரையில் இருந்து முகத்துவார பகுதி வரை உள்ள சாலையில் புள்ளிங்கோ பாய்ஸ் சிலர் பைக்குகளில் சாகசத்தில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில், கடந்த 14ம் தேதி இரவு பாண்டி மெரினா கடற்கரை சாலையில் வாலிபர் ஒருவர் விலை உயர்ந்த பைக்கில் வீலிங் செய்து அதனை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ எடுத்து கொண்டிருந்தார். இதைகண்ட சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், கிழக்கு போக்குவரத்து போலீசார் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட புள்ளிங்கோ பாய்ஸ் வாலிபரை பிடிக்க, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை பார்வையிட்டு விசாரித்து வந்தனர்.
அதில், புதுச்சேரி, வீமா நகர், கர்ணாஜோதி தெருவை சேர்ந்த தியாகராஜன் மகன் தீபக், 18; என்பவர் சாகச பைக் ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து, ஆபத்தான வகையில் வாகன ஓட்டியதாக தீபக் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து நேற்று முன்தினம் கைது செய்தனர்.
