ADDED : டிச 29, 2024 05:46 AM

பாகூர்: பாகூர் அருகே தனியார் பஸ் மோதி பைக்கில் சென்ற வாலிபர் தலை நசுங்கி இறந்தார். படுகாயமடைந்த அவரது நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி, பூமியான்பேட்டை, பாவாணர் நகரை சேர்ந்தவர் கணேஷ் மகன் திவேஷ் 19. இவர், 10ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த பவுல்ராஜ் மகன் கிறிஸ்டோபர், 16, என்பவருடன் நேற்று காலை கடலுாருக்கு சென்றார். பின், அங்கிருந்து புறப்பட்டு இருவரும் ஸ்பிளெண்டர் பைக்கில் புதுச்சேரி நோக்கி மதியம் 1.30 மணியளவில் வந்து கொண்டிருந்தனர். பைக்கை, திவேஷ் ஒட்டினார்.
நோனாங்குப்பம் அடுத்த டோல்கேட் பகுதியில் பேரிகார்டு அருகே சென்றபோது, முந்தி செல்ல முயன்ற தனியார் பஸ், பைக் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த திவேஷ் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கிறிஸ்டோபர் படுகாயமடைந்தார். தகவறிந்த கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தில் சிக்கிய உயிரிழந்த திவேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த கிறிஸ்டோபர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.