ADDED : ஆக 27, 2025 11:12 PM
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அருகே தனியார் இரும்பு கம்பெனியில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தந்தை கண் முன்னே மகன் பரிதாபமாக இறந்தார்.
பீகார் மாநிலம், கைரியா தள்மான்பூர் பகுதியை சேர்ந்தவர் முகமது மசிக். இவரது மகன் முகமது ரப்பன், 19. இவர்கள் நெட்டப்பாக்கம் அருகே ஏரிப்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் ஏ.எம்.எல்., இரும்பு கம்பெனியில், காஸ் கட்டிங் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் காலை முகமது ரப்பன், இரும்பு கம்பிகளை காஸ் கட்டிங் இயந்திரம் மூலம் வெட்டிக் கொண்டிருந்தபோது, அதிலிருந்து வந்த நெருப்பு அருகில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரில் பட்டவுடன் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில் முகமது ரப்பன் படு காயமடைந்தார். அவரை, தந்தை முகமது மசிக் உள்ளிட்ட சக ஊழியர்கள் மீட்டு ஜிப்மருக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
முகமது மசிக் அளித்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார், கம்பெனியின் ஒப்பந்ததாரர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த டப்ரீஸ், பொறுப்பாளர் உத்தரபிரதேச மாநிலம் மோகித் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
