ADDED : செப் 12, 2026 05:52 PM
புதுச்சேரி: வாலிபரை கத்தியால் வெட்டி தப்பியோடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, பாவாணர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 28; பகுதி நேர கார் ஒட்டுனர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சந்துரு, 29; என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 3ம் தேதி சந்துரு, அவரது நண்பர் மணிகண்டன் ஆகியோர் கார்த்திகேயனை போன் மூலம் தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கார்த்திகேயன் அவரது வீட்டின் அருகே நின்றிருந்தபோது, அங்கு பைக்கில்
வந்த சந்துரு திடீரென தகாத வார்த்தையால் திட்டி, மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்திகேயனை வெட்டினார். இதில், கார்த்திகேயனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்த சந்துரு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். ரத்தவெள்ளத்தில் கிடந்த கார்த்திகேயனை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து சந்துருவை தேடி வருகின்றனர்.
