அரையிறுதியில் இந்திய ஜோடி * சிங்கப்பூர் பாட்மின்டனில்
அரையிறுதியில் இந்திய ஜோடி * சிங்கப்பூர் பாட்மின்டனில்
ADDED : மே 29, 2026 10:52 PM

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் கய் ஜிங், ஆரோன் தய் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 19-21 என இழந்த இந்திய ஜோடி, அடுத்த இரு செட்டையும் 21-17, 21-13 என கைப்பற்றியது.
ஒரு மணி நேரம், 5 நிமிடம் நீடித்த போட்டி முடிவில் இந்திய ஜோடி 19-21, 21-17, 21-13 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி, மலேசியாவின் சென், டோ ஜோடியை சந்தித்தது. முதல் செட்டில் 16-18 என இந்திய ஜோடி பின்தங்கியது. அப்போது, காயம் காரணமாக மலேசிய ஜோடி விலகியது. இதனால் இந்திய ஜோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சிந்து ஏமாற்றம்
பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் உலகத் தரவரிசையில் 12வது இடத்திலுள்ள இந்தியாவின் சிந்து, 17-21, 14-21 என உலகின் 'நம்பர்-1' வீராங்கனை, தென் கொரியாவின் ஆன் சே யங்கிடம் தோல்வியடைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், 19-21, 21-15, 15-21 என ஜப்பானின் வடனபேவிடம் தோல்வியடைந்தார்.
