ADDED : பிப் 20, 2025 08:56 PM

புதுடில்லி: இந்திய பாட்மின்டன் வீரர் சாத்விக்சாய்ராஜ் தந்தை காலமானார்.
இந்திய பாட்மின்டன் வீரர் சாத்விக்சாய்ராஜ் 24. ஆந்திர மாநிலம் அமலாபுரத்தை சேர்ந்த இவர், 2015ல் சர்வதேச பாட்மின்டன் அரங்கில் காலடி வைத்தார். சகவீரர் சிராக் ஷெட்டியுடன் இணைந்து உலக சாம்பியன்ஷிப் (வெண்கலம், 2022), காமன்வெல்த் விளையாட்டு (2022ல் தங்கம், 2018ல் வெள்ளி), ஆசிய சாம்பியன்ஷிப் (2023ல் தங்கம்), ஆசிய விளையாட்டு (2022ல் தங்கம்) இரட்டையரில் பதக்கம் வென்றுள்ளார். சாத்விக் இடம் பெற்றிருந்த இந்திய அணி தாமஸ் கோப்பை (2022) வென்றது. கடந்த 2023ல் அதிவேகமாக 'ஸ்மாஷ்' (மணிக்கு 565 கி.மீ.,) செய்து 'கின்னஸ்' சாதனை படைத்த இவர், விரைவில் நாட்டின் உயரிய 'கேல் ரத்னா' விருது பெற உள்ளார்.
டில்லியில் நடக்கும் 43வது 'இன்டர்-யூனிட்' தொடரில் பங்கேற்று வந்த சாத்விக்சாய்ராஜுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நேற்று அதிகாலை, அவரது தந்தை காசி விஸ்வநாதன் மாரடைப்பால் காலமானார். ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியரான காசி விஸ்வநாதன், சாத்விக்சாய்ராஜ் 'கேல் ரத்னா' விருது பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க டில்லி செல்ல தயாராக இருந்தார். தற்போது இவர் மரணமடைந்திருப்பது சாத்விக் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

