/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
சிந்துவுக்கு 'ஷாக்'... காலிறுதியில் லக்சயா சென்
/
சிந்துவுக்கு 'ஷாக்'... காலிறுதியில் லக்சயா சென்
ADDED : ஆக 02, 2024 12:16 AM

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டன் 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார். இந்திய வீரர் லக்சயா சென் காலிறுதிக்கு முன்னேறினார்.
பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டன் பாட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் லக்சயா சென், பிரனாய் மோதினர். ஒலிம்பிக் பாட்மின்டன் வரலாற்றில் முதன்முறையாக இரு இந்திய வீரர்கள் மோதிக் கொண்டனர். முதல் செட்டை 21-12 எனக் கைப்பற்றிய லக்சயா சென், இரண்டாவது செட்டை 21-6 என வென்றார். முடிவில் லக்சயா சென் 21-12, 21-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். ஒலிம்பிக் பாட்மின்டன் ஒற்றையரில் காலிறுதிக்கு முன்னேறிய 3வது இந்திய வீரரானார். காலிறுதியில் லக்சயா சென், சீனதைபேயின் சோ டியன் சென் மோதுகின்றனர்.
சிந்து ஏமாற்றம்: பெண்கள் ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் சிந்து, சீனாவின் ஹி பிங் ஜியாவோ மோதினர். ரியோ (வெள்ளி, 2016), டோக்கியோ (வெண்கலம், 2021) ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்து, பாரிசிலும் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் செட்டை 19-21 என இழந்த சிந்து, இரண்டாவது செட்டை 14-21 எனக் கோட்டைவிட்டார். முடிவில் சிந்து 19-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் 'ஹாட்ரிக்' பதக்கம் வெல்லும் சிந்துவின் கனவு தகர்ந்தது.
சாத்விக்-சிராக் அதிர்ச்சி:ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா, சோ வூய் யிக் ஜோடியை சந்தித்தது. இதில் சாத்விக்-சிராக் ஜோடி 21-13, 14-21, 16-21 என தோல்வியடைந்து வெளியேறியது.