ADDED : பிப் 19, 2024 10:59 PM

புதுடில்லி: இந்திய பாட்மின்டன் அரங்கின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார், 17 வயது வீராங்கனை அன்மோல்.
ஆசிய அணிகளுக்கான பாட்மின்டன் சாம்பியன்ஷிப் மலேசியாவில் நடந்தது. இதுவரை எவ்வித பதக்கமும் வெல்லாத சிந்து தலைமையிலான இந்திய பெண்கள் அணி, முதல் போட்டியில் வலிமையான சீனாவை சந்தித்தது. முதல் 4 போட்டி முடிவில் இந்தியா 2-2 என சமனில் இருந்தது.
ஐந்தாவது போட்டியில் (ஒற்றையர்) உலகத் தரவரிசையில் 472 வது இடத்திலுள்ள, 19 வயது பிரிவின் 'நம்பர்-1' வீராங்கனை, இந்தியாவின் அன்மோல் கார்ப் (ஹரியானா), 22-10, 14-21, 21-18 என சீனாவின் ஊ லுவை (149வது இடம்) சாய்த்து வெற்றிக்கு கைகொடுத்தார்.
அரையிறுதியில் மீண்டும் இந்தியா 2-2 என சமனில் இருந்தது. கடைசி போட்டியில் களமிறங்கிய அன்மோல், உலகத் தரவரிசையில் 49 வது இடத்திலுள்ள ஜப்பானின் நட்சுகியை சாய்த்து, இந்தியாவை பைனலுக்கு கொண்டு சென்றார்.
பைனலில் இந்தியா தாய்லாந்து மோதின. இந்தியா, தாய்லாந்து தலா 2 வெற்றி பெற்ற, மறுபடியும் ஸ்கோர் 2-2 என ஆனது. தங்கம் கொண்டு செல்லும் வெற்றியாளரை முடிவு செய்யும் கடைசி போட்டியில் அன்மோல் களமிறங்கினார். இம்முறை 45வது இடத்திலுள்ள பார்ன்பிச்சாவை (21-14, 21-9) வீழ்த்தினார்.
இதையடுத்து ஆசிய அணிகளுக்கான பாட்மின்டனில் இந்தியா முதல் தங்கம் வென்றது. இளம் நட்சத்திரமான இவர், செய்னா நேவலின் தீவிர ரசிகை. தற்போது இந்தியாவின் அடுத்த 'செய்னா' என இவரை அழைக்கின்றனர். அன்மோல் கூறுகையில்,'' செய்னா அதிக துணிச்சலுடன், தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடுவார். நானும், இவரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள், அவரைப் போன்றே நானும் விளையாடுகிறேன். என்னை செய்னாவுடன் ஒப்பிடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார்.

