/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன்: காலிறுதியில் இந்தியா
/
பாட்மின்டன்: காலிறுதியில் இந்தியா
ADDED : ஏப் 30, 2024 12:08 AM

செங்டு: தாமஸ் கோப்பை பாட்மின்டனில் இங்கிலாந்தை வென்ற இந்திய ஆண்கள் அணி காலிறுதிக்குள் நுழைந்தது.
சீனாவில் 33வது தாமஸ் கோப்பை (ஆண்கள்), 30வது உபர் கோப்பை (பெண்கள்) பாட்மின்டன் தொடர் நடக்கிறது. 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய பெண்கள் அணி கனடா, சிங்கப்பூரை வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
'சி' பிரிவில் இடம் பிடித்த இந்திய ஆண்கள் அணி முதல் போட்டியில் தாய்லாந்தை சாய்த்தது. அடுத்து இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.
ஒற்றையர் முதல் போட்டியில் இந்தியாவின் பிரனாய், 21-15, 21-15 என இங்கிலாந்தின் ஹாரி ஹுவாங்கை வீழ்த்தினார். ஆண்கள் இரட்டையர் முதல் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, இங்கிலாந்தின் பென் லேன், சீன் வெண்டி ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை 21-17 என வென்ற இந்திய ஜோடி, அடுத்த செட்டை 19-21 என இழந்தது. மூன்றாவது செட்டில் 21-15 என அசத்தியது. முடிவில் இந்திய ஜோடி 21-17, 19-21, 21-15 என வென்றது.
இரண்டாவது ஒற்றையர் போட்டியில் ஸ்ரீகாந்த், 21-16, 21-11 என இங்கிலாந்தின் நதீமை வீழ்த்தினார். இரண்டாவது இரட்டையர் போட்டியில் இந்தியாவின் துருவ் கபிலா, அர்ஜுன் ஜோடி 21-17, 21-19 என இங்கிலாந்தின் ஈஸ்டன், கிரீன் ஜோடியை சாய்த்தது.
கடைசி 5வதாக நடந்த ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ், 21-18, 21-12 என இங்கிலாந்தின் சோழன் கயனை வென்றார். இந்தியா 5-0 என வெற்றி பெற்றது. அடுத்தடுத்து இரு போட்டியில் வென்ற இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது.

