ADDED : ஏப் 04, 2024 10:25 PM

புதுடில்லி: உபர் கோப்பை பாட்மின்டன் தொடரில் இருந்து இந்தியாவின் சிந்து விலகினார்.
சீனாவின் செங்டுவில் தாமஸ், உபர் கோப்பை பாட்மின்டன் தொடர் ஏப். 27ல் துவங்குகிறது. இத்தொடருக்கான இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் அறிவிக்கப்பட்டன.
உபர் கோப்பைக்கான இந்திய பெண்கள் அணியில் இருந்து, இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்து விலகினார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் விதமாக இவர் பங்கேற்கவில்லை.
இதேபோல அஷ்வினி பொன்னப்பா-தனிஷா, திரீசா-காயத்ரி கோபிசந்த் ஜோடிகள் இரட்டையர் பிரிவில் இருந்து விலகின. முன்னணி வீராங்கனைகள் விலகியதால் நடப்பு தேசிய சாம்பியன் அன்மோல் கார்ப், தன்வி சர்மா, அஷ்மிதா, இஷாராணி உள்ளிட்ட இளம் வீராங்கனைகள் தேர்வாகினர்.
தாமஸ் கோப்பையில் 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கும் இந்திய அணியில் பிரனாய், லக்சயா சென், ஸ்ரீகாந்த், கிரண் ஜார்ஜ், சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி, அர்ஜுன், துருவ் கபிலா இடம் பிடித்துள்ளனர். இரட்டையர் பிரிவுக்கு மாற்று வீரராக சாய் பிரதீக் தேர்வானார்.

