/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
காம்பிர் சர்ச்சை... ஹைடனுக்கு பதிலடி
/
காம்பிர் சர்ச்சை... ஹைடனுக்கு பதிலடி
ADDED : ஆக 11, 2025 10:56 PM

மும்பை: காம்பிர் கவனமாக பேசி இருக்க வேண்டும் என்ற ஹைடனுக்கு, வெங்சர்க்கார் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய ஐந்தாவது, கடைசி டெஸ்ட், லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. இப்போட்டிக்கான ஆடுகளத்தை ஆய்வு செய்த போது, இந்திய அணி பயிற்சியாளர் காம்பிர், தலைமை பராமரிப்பாளர் லீ போர்டிஸ் இடையில் மோதல் ஏற்பட்டது.
அப்போது காம்பிர், 'நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல தேவையில்லை. அதற்கான உரிமை உங்களுக்கு இல்லை. நீங்கள் வெறும் ஆடுகள பராமரிப்பாளர் தான்,'' என காட்டமாக கூறினார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி முன்னாள் துவக்க வீரர் ஹைடன் கூறுகையில்,'' காம்பிர் தனது வார்த்தைகளை கவனமாக தேர்வு செய்து பயன்படுத்தி இருக்கலாம்,'' என்றார்.
இதற்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் வெங்சர்க்கார் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியது:
பயிற்சியாளர் என்ற முறையில் ஆடுகளத்தை அருகில் சென்று பார்க்க காம்பிருக்கு முழு உரிமை உள்ளது. மற்ற அணிகள் இந்தியாவில் விளையாட வரும் போது, பயிற்சியாளர், கேப்டன் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அணியினரும் ஆடுகளத்தை தீவிரமாக ஆய்வு செய்வர். 'மீடியா' கூட ஆடுகளத்தை ஆய்வு செய்ய அனுமதி உண்டு. நாங்கள் யாரும், எதுவும் சொல்வது கிடையாது. ஆனால், நாங்கள், இங்கிலாந்தில் விளையாடும் போது மட்டும் எப்படி விதிகள் மாறுகின்றன.
ஒரு முக்கியமான போட்டிக்கு முன், 'ஆடுகளத்துக்கு அருகில் யாரும் செல்லாதீர்,' என பராமரிப்பாளர் தெரிவித்து இருந்தால், ஹைடன் சரி என்று சொல்லி இருப்பரா. ஒருவேளை ஆஸ்திரேலிய அணியினருக்கு இப்படி நடத்திருந்தால், காம்பிரை விட இன்னும் கடினமான வார்த்தைகளை தேர்வு செய்து, பராமரிப்பாருக்கு பதில் தெரிவித்து இருப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.