/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய அணிக்கு 'ஹாட்ரிக்' கோப்பை * ஷிகர் தவான் நம்பிக்கை
/
இந்திய அணிக்கு 'ஹாட்ரிக்' கோப்பை * ஷிகர் தவான் நம்பிக்கை
இந்திய அணிக்கு 'ஹாட்ரிக்' கோப்பை * ஷிகர் தவான் நம்பிக்கை
இந்திய அணிக்கு 'ஹாட்ரிக்' கோப்பை * ஷிகர் தவான் நம்பிக்கை
ADDED : நவ 05, 2024 11:47 PM

மும்பை: ''ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மீண்டும் அசத்தும். 'ஹாட்ரிக்' கோப்பை கைப்பற்றும்,'' என ஷிகர் தவான் தெரிவித்தார்.
சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்த சோகத்தில் இந்திய அணி உள்ளது. அடுத்து ஆஸ்திரேலியா சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட், பெர்த்தில் நவ. 22ல் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (டிச. 6-10), பிரிஸ்பேன் (டிச. 14-18), மெல்போர்ன் (டிச. 26-30), சிட்னியில் (2025, ஜன. 3-7) நடக்கவுள்ளன. கடந்த 2018-19, 2020-21 என அடுத்தடுத்து 'பார்டர்-கவாஸ்கர்' தொடரை இந்தியா வென்றது. இம்முறை அசத்தினால் 'ஹாட்ரிக்' கோப்பை கைப்பற்றலாம்.
தடுமாறும் கோலி
தற்போது கேப்டன் ரோகித், சீனியர் பேட்டர் கோலி 'பார்ம்' இல்லாமல் தவிப்பது பலவீனம். நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்டில் ரோகித் 91 ரன் (சராசரி 15.17) தான் எடுத்தார். 2024ல் 11 போட்டிகளில் 588 ரன் (சராசரி 29.40) எடுத்துள்ளார். நியூசிலாந்து பந்துவீச்சில் தடுமாறிய கோலி 3 போட்டியில் 93 ரன் (சராசரி 15.50) தான் எடுத்தார். இந்த ஆண்டு 6 டெஸ்டில் 250 ரன் (சராசரி 22.72) ரன் தான் எடுத்துள்ளார். டெஸ்டில் பும்ராவின் வேகம் பெரிதாக எடுபடவில்லை. காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத முகமது ஷமி, ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்திய அணி தடுமாறுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4-0 என வென்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் கூறியது:
கடந்த இரு முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றோம். இந்த முறையும் சிறப்பாக செயல்பட்டு 'ஹாட்ரிக்' கோப்பை வெல்வோம். இந்திய வீரர்கள், ஆஸ்திரேலியாவுக்கு நேர்மறையான சிந்தனையுடன் வெற்றியை மட்டும் இலக்காக கொண்டு செல்ல வேண்டும். ரோகித், கோலி, பும்ரா போன்றோர் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக போட்டிகளில் விளையாடியுள்ளனர். இவர்களது அனுபவம் நமக்கு கைகொடுக்கும். தங்களது அனுபவங்களை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
சவாலுக்கு தயார்
சுப்மன் கில், ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் உள்ளிட்ட அடுத்த தலைமுறை வீரர்கள் சாதிப்பதற்கு ஆர்வமாக இருக்கின்றனர். சர்வதேச அளவில் தங்களது திறமையை ஏற்கனவே நிரூபித்துள்ளனர். இது இந்தியாவுக்கு சாதகம். ஆஸ்திரேலியாவில் வேகப்பந்துவீச்சை சமாளிப்பது கடினம். இந்த சவாலுக்கு நமது பேட்டர்கள் தயாராக உள்ளனர்.வரும் 2025ல் நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணி சாதிக்கும். கோப்பை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது. அணியில் சீனியர், இளம் வீரர்கள் சமஅளவில் இடம் பெற்றிருப்பது பலம்.இவ்வாறு தவான் கூறினார்.
ராகுலுக்கு வியூகம்
ஆஸ்திரேலிய 'வேகப்புயல்' ஸ்காட் போலண்ட் கூறுகையில்,''ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்துகள் அதிகளவி்ல் 'பவுன்ஸ்' ஆகும். இது இந்திய சூழ்நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் ராகுலுக்கு எதிராக பந்துவீசியுள்ளேன். தற்போது எங்களது மண்ணில் இவரை சந்திக்க உள்ளனே். உலக தரம் வாய்ந்த வீரர் தான். ஆனாலும் டெஸ்ட் தொடரில் இவரை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்காக பிரத்யேக வியூகம் வகுக்கப்படும்,'' என்றார்.