/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய அணிக்கு ரூ. 131 கோடி பரிசு * வாரி வழங்கியது பி.சி.சி.ஐ.,
/
இந்திய அணிக்கு ரூ. 131 கோடி பரிசு * வாரி வழங்கியது பி.சி.சி.ஐ.,
இந்திய அணிக்கு ரூ. 131 கோடி பரிசு * வாரி வழங்கியது பி.சி.சி.ஐ.,
இந்திய அணிக்கு ரூ. 131 கோடி பரிசு * வாரி வழங்கியது பி.சி.சி.ஐ.,
ADDED : மார் 10, 2026 11:13 PM

புதுடில்லி: 'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 131 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆமதாபாத்தில் நடந்த 10வது 'டி-20' உலக கோப்பை பைனலில் அசத்திய இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் சொந்த மண்ணில் 'டி-20' உலக கோப்பை கைப்பற்றிய முதல் அணி, தொடர்ந்து 2 கோப்பை (2024, 2026), ஒட்டுமொத்தமாக 3 கோப்பை (2007, 2024, 2026) வென்ற முதல் அணி என மூன்று சாதனைகள் படைத்தது.
இதை கவுரவிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ரூ. 131 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ல் 'டி-20' உலக கோப்பை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான அணிக்கு ரூ. 125 கோடி தான் வழங்கப்பட்டது. தற்போது ரூ. 6 கோடி உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய அணியின் 15 வீரர்களுக்கு தலா ரூ. 6 கோடி வழங்கப்படும். மீதமுள்ள ரூ. 41 கோடி பயிற்சியாளர் குழுவினருக்கு அளிக்கப்படும்.
இது பற்றி பி.சி.சி.ஐ., செயலர் தேவஜித் சைக்கியா வெளியிட்ட செய்தியில்,'டி-20 உலக கோப்பை வென்று, வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர்கள், பயிற்சி குழுவினர், தேர்வாளர்கள் என அனைவருக்கும் வாழ்த்துகள். அணியின் வெற்றிநடை தொடரட்டும்,'என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோனி வழியில் சூர்யா
கபில்தேவ் (1983, ஒருநாள் போட்டி), தோனி (2007ல் 'டி-20', 2011ல் ஒருநாள் போட்டி), ரோகித் சர்மா (2024) தலைமையில் இந்திய அணி உலக கோப்பை வென்றது. இவர்கள் வரிசையில் சூர்யகுமாரும் (2026) சேர்ந்துள்ளார்.
ஆமதாபாத்தில் இருந்து நேற்று சொந்த ஊரான மும்பை திரும்பிய கேப்டன் சூர்யகுமார் கூறுகையில்,''சொந்த மண்ணில் சாதிக்க விரும்பினோம். எங்களது கனவு நனவானது. 2024, 26 என தொடர்ந்து இரு 'டி-20' உலக கோப்பை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒலிம்பிக்கில் தங்கம் (2028), மீண்டும் உலக கோப்பை வெல்வது என எங்களது வெற்றிப்பயணம் தொடரும். ரோகித், தோனி போன்ற மகத்தான வீரர்கள் பட்டியலில் நானும் சேர்ந்தது 'ஸ்பெஷல்' உணர்வை தருகிறது.
உலக கோப்பை தொடருக்கு முன் தோனியை சந்தித்தேன். ஐ.சி.சி., தொடரை எப்படி அணுக வேண்டும் என்பது பற்றி ஆலோசனை வழங்கினார். 'நமது அணி சிறந்தது. துணிச்சலாக செயல்பட்டால், கோப்பை வெல்லலாம்' என ஊக்கம் அளித்தார். இதற்கேற்ப சாம்பியன் பட்டம் (மார்ச் 8) வென்றோம். இந்த மகிழ்ச்சியை விடிய விடிய கொண்டாடினோம். காலை 8 மணி வரை விழித்திருந்தோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சில நாள் 'ரெஸ்ட்' எடுத்து விட்டு, மார்ச் 28ல் துவங்க உள்ள பிரிமியர் தொடருக்கு தயாராக வேண்டும்,''என்றார்.
அர்ஷ்தீப் சிங்கிற்கு அபராதம்
'டி-20' உலக கோப்பை பைனலின் போது இந்திய பவுலர் அர்ஷ்தீப் சிங் ஓவரில் (11வது), நியூசிலாந்தின் டேரில் மிட்சல் வரிசையாக 2 சிக்சர் விளாசினார். 5வது பந்தை நேராக அடித்தார். இதை 'பீல்டிங்' செய்த அர்ஷ்தீப், அதே வேகத்தில் டேரில் மிட்சலை நோக்கி பந்தை 'த்ரோ' செய்தார். அவரது கால் பேடு, தொடை பகுதியில் பந்து தாக்கியது. இதனால் மிட்சல் கோபப்பட்டார். கேப்டன் சூர்யகுமார் தலையிட்டு சமாதானம் செய்தார். இது பற்றி கள அம்பயர்கள் புகார் அளித்தனர்.
ஐ.சி.சி., வீரர்கள் நடத்தை விதிமுறைப்ப்படி (2.9), வீரர்களை நோக்கி பந்தை ஆபத்தான முறையில் எறிவது தவறு. இதையடுத்து அர்ஷ்தீப் சிங்கிற்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீத அபராதம், ஒருதகுதி இழப்பு புள்ளியை தண்டனையாக ஐ.சி.சி., 'மேட்ச் ரெப்ரி' ஆண்டி பைகிராப்ட் விதித்தார். அர்ஷ்தீப் ஏற்றுக் கொண்டதால், விசாரணை நடத்தப்படவில்லை.
இஷான் உற்சாகம்
'டி-20' உலக கோப்பை பைனலில் அரைசதம் விளாசிய இஷான் கிஷான், இந்திய வெற்றிக்கு கைகொடுத்தார். 9 போட்டியில் 317 ரன் (ஸ்டிரைக் ரேட் 193.29) குவித்தார். ஆமதாபாத்தில் இருந்து சொந்த ஊரான பாட்னா (பீஹார்) திரும்பிய இவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இஷான் கூறுகையில்,''இந்திய அணி 'டி-20' உலக கோப்பை வென்றது, நமது வீரர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்திற்கும் சிறந்த தருணம். சிறப்பாக விளையாடி, எதிர்காலத்திலும் கோப்பை வெல்வோம். இளம் வீரர்களுக்கு தொடர்ந்து ஊக்கம் அளிப்பேன்,''என்றார்.
பெண்களுக்கு குறைவு
'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய ஆண்கள் அணிக்கு அதிகபட்சமாக ரூ.131 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ல் உலக கோப்பை (50 ஓவர்) வென்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூ. 51 கோடி தான் பரிசு வழங்கப்பட்டது. ஆண்கள் அணியுடன் ஒப்பிடுகையில் ரூ. 80 கோடி குறைவு. பி.சி.சி.ஐ., பாரபட்சம் காட்டுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
* சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் 'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய ஆண்கள் அணிக்கு ரூ. 27.48 கோடி, உலக கோப்பை வென்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூ. 39.50 கோடி பரிசு வழங்கப்பட்டது. இதில் பெண்களுக்கு பரிசுத் தொகை அதிகம்.

