/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய அணி எப்படி: கும்ளே கணிப்பு
/
இந்திய அணி எப்படி: கும்ளே கணிப்பு
ADDED : பிப் 02, 2026 10:57 PM

புதுடில்லி: ''உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா, கோலியை 'மிஸ்' செய்வோம். தற்போதைய அணியுடன் ஒப்பிடுகையில், 2024ல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி 10 சதவீதம் முன்னிலையில் உள்ளது,''என கும்ளே தெரிவித்தார்.
இந்தியா, இலங்கையில் 'டி-20' உலக கோப்பை தொடர் (பிப்.7-மார்ச் 8) நடக்க உள்ளது. 'நடப்பு சாம்பியன்' இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உட்பட 20 அணிகள் பங்கேற்கின்றன.
கடந்த 2024ல் பார்படாசில் நடந்த பரபரப்பான 'டி-20' உலக கோப்பை பைனலில் இந்திய அணி (176/7), தென் ஆப்ரிக்காவை (169/8), 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது. இப்போட்டியில் இந்தியா 4.3 ஓவரில் 34/3 ரன் எடுத்து தவித்தது. அப்போது அனுபவ கோலி, 76 ரன் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்றார். இவருக்கு அக்சர் படேல் (47) கைகொடுத்தார். கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, 257 ரன் (8 போட்டி) குவித்து, கோப்பை கனவு நனவாக உதவினார். ரோகித், கோலி, ரவிந்திர ஜடேஜா என மூவரும் சர்வதேச 'டி-20' அரங்கில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர்.
தற்போது சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி அசத்துகிறது. சமீபத்திய தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்துக்கு எதிரான 'டி-20' தொடர்களை வென்றது. அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் என அதிரடி பேட்டர்கள் உள்ளனர். 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா, 'யார்க்கர்' பும்ரா, 'சுழல் மாயாவி' வருண் சக்ரவர்த்தி இருப்பதால், மீண்டும் 'டி-20' உலக கோப்பை வென்று வரலாறு படைக்க காத்திருக்கிறது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கும்ளே கூறுகையில்,''அனுபவ ரோகித், கோலி என இரு ஜாம்பவான்களை இம்முறை 'மிஸ்' செய்வோம். இருப்பினும் அணியின் பேட்டிங், பவுலிங் வலிமையாக உள்ளது. தற்போதைய அணியுடன் ஒப்பிடுகையில் 2024ல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி 10 சதவீதம் முன்னிலையில் உள்ளது. அப்போது பைனலில் வெற்றி பெற கோலியின் அனுபவ ஆட்டம் உதவியது. இம்முறை சூர்யகுமாரின் பங்கு முக்கியமானது. இக்கட்டான நிலையில் அணிக்கு கைகொடுக்க வேண்டிய பொறுப்பு இவருக்கு உள்ளது,''என்றார்.

