/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அசத்துவரா இந்திய 'டாப் ஆர்டர்' வீரர்கள்... * ரவிந்திர ஜடேஜா எதிர்பார்ப்பு
/
அசத்துவரா இந்திய 'டாப் ஆர்டர்' வீரர்கள்... * ரவிந்திர ஜடேஜா எதிர்பார்ப்பு
அசத்துவரா இந்திய 'டாப் ஆர்டர்' வீரர்கள்... * ரவிந்திர ஜடேஜா எதிர்பார்ப்பு
அசத்துவரா இந்திய 'டாப் ஆர்டர்' வீரர்கள்... * ரவிந்திர ஜடேஜா எதிர்பார்ப்பு
ADDED : டிச 21, 2024 11:03 PM

மெல்போர்ன்: ''இந்திய அணியின் 'டாப் ஆர்டர்' வீரர்கள் சறுக்குவதால், பின் வரிசை வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. வரும் டெஸ்டில் இவர்கள் ரன் மழை பொழிய வேண்டும்,'' என ஜடேஜா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டி கொண்ட 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட், 'பாக்சிங் டே' போட்டியாக, டிச. 26ல் மெல்போர்னில் துவங்குகிறது. இதுவரை முடிந்த மூன்று டெஸ்டில் 'டாப் ஆர்டர்' வீரர்கள் ஜெய்ஸ்வால் (0, 161, 0, 24, 4, 4), ராகுல் (26, 77, 37, 7, 84, 4), சுப்மன் கில் (2 டெஸ்டில் 31, 28, 1), கோலி (5, 100, 7, 11, 3), ரிஷாப் (37, 1, 21, 28, 9), ரோகித் (3, 6, 10) சீரான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை.
இதுகுறித்து இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா கூறியது:
ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற அன்னிய மண்ணில் விளையாடும் போது 'டாப் ஆர்டர்' வீரர்கள் ரன் எடுப்பது மிக முக்கியம். இவர்கள் அணியை கைவிடும் போது, பின் வரிசை பேட்டர்களுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது.
மெல்போர்ன் டெஸ்டில் 'டாப் ஆர்டர்', 'மிடில் ஆர்டர்' வீரர்கள் சிறப்பாக செயல்படுவர் என நம்புகிறேன். ஒவ்வொரு பேட்டரும் தங்கள் பங்கிற்கு ரன் மழை பொழிந்தால், ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் ஸ்கோர் உயரும்.
மூன்று போட்டி முடிந்த நிலையில், தொடர் 1-1 என சமனில் உள்ளது. அடுத்த இரு போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும். இதில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட , 'பார்டர்-கவாஸ்கர்' டிராபியை தக்கவைத்துக் கொள்வோம். ஏனெனில் கடந்த இரு தொடரில் இந்தியா தான் கோப்பை கைப்பற்றியது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐந்து நிமிடத்துக்கு முன்...
டெஸ்ட் அரங்கில் அஷ்வின், ஜடேஜா இணைந்து, 58 போட்டியில் 587 விக்கெட் சாய்த்துள்ளனர். அஷ்வின் ஓய்வு குறித்து ஜடேஜா கூறுகையில்,'' பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஐந்து நிமிடத்துக்கு முன் தான், அஷ்வின் ஓய்வு குறித்து தெரியவந்தது. இது ஆச்சர்யமாக இருந்தது. அன்றைய நாள் முழுவதும் என்னுடன் தான் இருந்தார். ஓய்வு பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
இருவரும் பல ஆண்டுகள் இணைந்து விளையாடியுள்ளோம். எனது பவுலிங் பார்ட்னராக இருந்தார். போட்டியின் சூழல், பேட்டர்கள் மனநிலை குறித்து பேசிக் கொள்வோம். இதுபோன்ற விஷயங்களை 'மிஸ்' செய்வேன். அஷ்வின் போன்ற சிறந்த 'ஆல் ரவுண்டரை' இந்திய அணி கண்டறியும். ஒவ்வொருவருக்கும் தகுந்த மாற்று வீரர் கிடைப்பர். அஷ்வின் இடத்தை பிடிக்க இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது,''என்றார்.