ADDED : பிப் 09, 2025 11:27 PM

நாக்பூர்: ரஞ்சி கோப்பை காலிறுதியில் தமிழக பேட்டர்கள் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறினர்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ரஞ்சி கோப்பை தொடர் நடக்கிறது. மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடக்கும் காலிறுதியில் தமிழகம், விதர்பா அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் விதர்பா அணி முதல் இன்னிங்சில் 264/6 ரன் எடுத்திருந்தது. கருண் நாயர் (100), ஹர்ஷ் துபே (19) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஏழாவது விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்த போது சோனு யாதவ் 'வேகத்தில்' கருண் நாயர் (122) வெளியேறினார். ஹர்ஷ் துபே (69) அரைசதம் கடந்தார். விதர்பா அணி முதல் இன்னிங்சில் 353 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தமிழகம் சார்பில் விஜய் சங்கர், சோனு யாதவ் தலா 3, முகமது 2 விக்கெட் சாய்த்தனர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய தமிழக அணிக்கு முகமது அலி (4), சாய் சுதர்சன் (7), பூபதி குமார் (0) ஏமாற்றினர். நாராயண் ஜெகதீசன் (22), விஜய் சங்கர் (22) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ஆன்ட்ரி சித்தார்த் (65) நம்பிக்கை தந்தார். ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 159 ரன் எடுத்து, 194 ன் பின்தங்கி இருந்தது. பிரதோஷ் ரஞ்சன் பால் (18), கேப்டன் சாய் கிஷோர் (6) அவுட்டாகாமல் இருந்தனர். விதர்பா அணி சார்பில் ஆதித்யா தாக்கரே 4 விக்கெட் கைப்பற்றினார். தமிழக பேட்டர்கள் எழுச்சி கண்டால் முதல் இன்னிங்சில் முன்னிலை பெறலாம்.