ADDED : பிப் 26, 2025 09:53 PM

நாக்பூர்: கேரளாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை பைனலில் விதர்பா அணியின் டேனிஸ் மாலேவார் சதம் விளாசினார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் பைனல் நடக்கிறது. இதில் கேரளா, விதர்பா அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்ற கேரளா அணி கேப்டன் சச்சின் பேபி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
விதர்பா அணிக்கு பார்த் (0), தர்ஷன் (1) ஏமாற்றினர். துருவ் ஷோரே (16) நிலைக்கவில்லை. பின் இணைந்த டேனிஷ் மாலேவார், கருண் நாயர் ஜோடி நம்பிக்கை தந்தது. ஆதித்யா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டேனிஸ், முதல் தர போட்டியில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த கருண் நாயர் அரைசதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 215 ரன் சேர்த்த போது கருண் நாயர் (86) 'ரன்-அவுட்' ஆனார்.
ஆட்டநேர முடிவில் விதர்பா அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 254 ரன் எடுத்திருந்தது. டேனிஷ் (138), யாஷ் தாக்கூர் (5) அவுட்டாகாமல் இருந்தனர். கேரளா அணி சார்பில் நிதிஷ் 2 விக்கெட் கைப்பற்றினார்.

