ADDED : மே 24, 2026 11:04 PM

லக்னோ: கிரிக்கெட் லீக் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடுகிறார் ஜாம்பவான் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், 26. இவருக்கு கடைசி போட்டியில் தான் லக்னோ (எதிர், பஞ்சாப்) தரப்பில் வாய்ப்பு தரப்பட்டது. இடது கை வேகப்பந்துவீச்சாளரான அர்ஜுன் முதல் ஓவரில் பிரப்சிம்ரன் சிங் விக்கெட்டை கைப்பற்றியிருக்கலாம். ஆனால், கீப்பர் ரிஷாப் பன்ட் 'கேட்ச்சை' நழுவவிட்டார். இந்த ஓவரில் 4 ரன் தான் கொடுத்தார். பின் இவரது துல்லிய 'யார்க்கரில்' பிரப்சிம்ரன், எல்.பி.டபிள்யு., ஆனார். இது, இந்த சீசனில் அர்ஜுன் கைப்பற்றிய முதல் விக்கெட். 4 ஓவரில் 36 கொடுத்து ஒரு விக்கெட் சாய்த்தார்.
இது பற்றி சச்சின் வெளியிட்ட செய்தியில்,'வெல் டன் அர்ஜுன். இந்த சீசனில் உனது செயல்பாடு பெருமை அளிக்கிறது. திறமை மீது நம்பிக்கை வைத்து, பொறுமையாக இருந்து கடினமாக பயிற்சி செய்ததை பார்த்தேன். கிரிக்கெட் என்பது ஒரு வீரரின் பொறுமை, திறமையை சோதிக்கும். இவற்றை நீ எளிதாக கையாண்ட விதம் அருமை. வாய்ப்புக்காக கடைசி போட்டி வரை காத்திருக்க நேர்ந்த போதும், நேர்மறையான எண்ணத்துடன் இருந்தது பாராட்டுக்குரியது,' என தெரிவித்துள்ளார்.
லக்னோவுக்கு புதிய கேப்டன்
லக்னோ: கிரிக்கெட் லீக் 19வது சீசனில் ஏமாற்றிய ரிஷாப் பன்ட் தலைமையிலான லக்னோ அணி, 14 போட்டியில், 4 வெற்றி, 10 தோல்வி என, 8 புள்ளிகளுடன் 9/10வது இடம் பிடித்தது. கடந்த ஆண்டு 7வது இடம் பிடித்த லக்னோ அணி, ரிஷாப் பன்ட் தலைமையில் (2025-26) விளையாடிய 28 போட்டியில், 10ல் மட்டுமே வென்றது. தவிர இவர், கடந்த இரண்டு சீசனில் பேட்டராகவும் (2025ல் 269, 2026ல் 312 ரன்) பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் அடுத்த சீசனில் புதிய கேப்டனுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ அணியின் கிரிக்கெட் இயக்குனர் டாம் மூடி கூறுகையில், ''இந்த சீசன் லக்னோ அணிக்கு கடினமாக அமைந்தது. அணியின் கேப்டனாக ரிஷாப் பன்ட்டிற்கு சவாலாக இருந்தது. இதனை, போட்டியின் முடிவில் காண முடிந்தது. இந்த நெருக்கடி, அவரது பேட்டிங்கிலும் பாதிப்பை ஏற்படுத்தியது நன்றாகவே தெரிந்தது. அணியின் செயல்பாடு குறித்து பரிசீலித்து, விரைவில் நல்ல முடிவு எடுப்போம்,'' என்றார்.
