/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கால்பந்து: அரையிறுதியில் தமிழகம்
/
கால்பந்து: அரையிறுதியில் தமிழகம்
ADDED : மே 10, 2024 10:06 PM

புதுடில்லி: பெண்களுக்கான தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் அரையிறுதிக்கு தமிழக அணி முன்னேறியது. நேற்று நடந்த லீக் போட்டியில் 5-0 என பஞ்சாப் அணியை வீழ்த்தியது.
இந்தியாவில் சீனியர் பெண்களுக்கான 28 வது தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. மொத்தம் 30 அணிகள் களமிறங்கின. தற்போது 12 அணிகள் பங்கேற்கும் பைனல் சுற்று நடக்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். நேற்று 'ஏ' பிரிவு போட்டிகள் நடந்தன. நடப்பு சாம்பியன் தமிழக பெண்கள் அணி, பஞ்சாப்பை எதிர்கொண்டது. போட்டி துவங்கிய 5வது நிமிடத்தில் தமிழக வீராங்கனை சந்தியா, முதல் கோல் அடித்தார். 10 வது நிமிடம் பிரியதர்ஷினி தனது பங்கிற்கு ஒரு கோல் அடித்தார்.
இரண்டாவது பாதியில் 80 வது நிமிடத்தில் தமிழக அணிக்கு அம்சவல்லி ஒரு கோல் அடித்து உதவினார். 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+1 வது) பஞ்சாப் வீராங்கனை லாலம் ஹாவோகிப் 'சேம்சைடு' கோல் அடித்து 'ஷாக்' தந்தார். முடிவில் தமிழக அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ரயில்வேஸ் அணி 5-0 என்ற கணக்கில் டில்லியை சாய்த்தது. மேற்கு வங்கம், சண்டிகர் மோதிய போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.
பைனல் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் தமிழகம் 13 புள்ளி (5 போட்டி, 4 வெற்றி, 1 'டிரா'), மேற்கு வங்கம் 10 புள்ளியுடன் (5ல் 3 வெற்றி, 1 'டிரா', 1 தோல்வி) முதல் இரு இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.