ADDED : ஏப் 25, 2026 11:14 PM

சான்யா: ஆசிய பீச் விளையாட்டு கபடியில் இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
சீனாவின் சான்யா நகரில், ஆசிய பீச் விளையாட்டு 6வது சீசன் நடக்கிறது. இதில் 45 நாடுகளில் இருந்து, 1790 பேர் பங்கேற்கின்றனர். மொத்தம் 14 விளையாட்டுகள், 62 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் 4 போட்டிகளில், 18 வீரர், 13 வீராங்கனைகள் என, 33 பேர் களமிறங்குகின்றனர்.
ஆண்களுக்கான கபடி 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. முதல் பாதியில் இந்திய அணி 27-16 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, 54-33 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பங்கேற்ற 3 போட்டியிலும் வென்ற இந்திய அணி, 6 புள்ளியுடன் பட்டியலில் முதலிடம் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய பெண்கள் அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறியது.
ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. நேற்று தனது முதல் போட்டியில் இந்திய அணி 19-10 என கஜகஸ்தானை வீழ்த்தியது. அடுத்து இரண்டாவது போட்டியில் இந்திய அணி 20-12 என பஹ்ரைனை சாய்த்தது.
