/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பஜ்ரங் புனியா 'சஸ்பெண்ட்': ஒலிம்பிக் கனவுக்கு சிக்கல்
/
பஜ்ரங் புனியா 'சஸ்பெண்ட்': ஒலிம்பிக் கனவுக்கு சிக்கல்
பஜ்ரங் புனியா 'சஸ்பெண்ட்': ஒலிம்பிக் கனவுக்கு சிக்கல்
பஜ்ரங் புனியா 'சஸ்பெண்ட்': ஒலிம்பிக் கனவுக்கு சிக்கல்
ADDED : மே 05, 2024 11:41 PM

புதுடில்லி: ஊக்கமருந்து சோதனைக்கு மறுத்த பஜ்ரங் புனியா 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா 30. கடந்த டோக்கியோ ஒலிம்பிக் (2020), மல்யுத்தத்தில் (65 கிலோ பிரீஸ்டைல் பிரிவு) வெண்கலம் வென்றார். சமீப காலமாக அடிக்கடி சர்ச்சையில் சிக்குகிறார். பாலியல் புகார் கூறப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (டபிள்யு.எப்.ஐ.,) முன்னாள் தலைவர் பிரஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராடினார். தற்போது ஊக்கமருந்து சோதனைக்கு மறுத்துள்ளார்.
ஆசிய அளவிலான ஒலிம்பிக் தகுதிப் போட்டி கடந்த மார்ச் 10ல் ஹரியானாவின் சோனேபட்டில் நடந்தது. இப்போட்டியின் போது தேசிய ஊக்கமருந்து தடுப்பு மைய ('நாடா') அதிகாரிகள், பஜ்ரங் புனியாவிடம் ஊக்கமருந்து சோதனைக்காக சிறுநீர் மாதிரி வழங்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்து, களத்தை விட்டு வெளியேறியுள்ளார். இது உலக ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் ('வாடா') விதிமுறைக்கு எதிரானது. இதையடுத்து கடந்த ஏப். 23ல் பஜ்ரங் புனியா, போட்டிகளில் பங்கேற்க 'நாடா' அமைப்பு தற்காலிக தடை (சஸ்பெண்ட்) விதித்தது. வரும் மே 7க்குள் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியது. இவரது விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில் பாரிஸ் ஒலிம்பிக்கில் (ஜூலை 26-ஆக. 11) பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும்.
மறுப்பு ஏன்
இது குறித்து பஜ்ரங் கூறுகையில்,''ஊக்கமருந்து சோதனைக்காக எனது சிறுநீர் மாதிரியை வழங்க மறுப்பு தெரிவிக்கவில்லை. அதிகாரிகள் காலாவதியான மருத்துவ உபகரணங்களை கொண்டு வந்தனர். இதற்கு விளக்கம் அளிக்கும்படி தான் வலியுறுத்தினேன். 'நாடா' அமைப்பின் நோட்டீசிற்கு எனது வக்கீல் விளக்கம் அளிப்பார்,''என்றார்.
டபிள்யு.எப்.ஐ., புதிய தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில்,''பஜ்ரங் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதை எங்களுக்கு 'நாடா' அமைப்பு முறைப்படி தெரிவிக்கவில்லை. இது பற்றி விளக்கம் கேட்போம். 'வாடா' அமைப்புக்கும் தகவல் தெரிவிப்போம்,''என்றார்.