ADDED : ஆக 05, 2026 11:06 PM

செயின்ட் லுாயிஸ்: செயின்ட் லுாயிஸ் செஸ், 'ரேபிட்' தொடரில் பிரக்ஞானந்தா, முதலிடம் பிடித்தார்.
அமெரிக்காவின் செயின்ட் லுாயிஸ் செஸ் கிளப் சார்பில் சர்வதேச 'ரேபிட் அண்டு பிளிட்ஸ்' தொடர் நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா உட்பட மொத்தம் 10 பேர் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட்' முறையில் போட்டி நடந்தன. நேற்று கடைசி மூன்று சுற்று நடந்தன.
ஏழாவது சுற்றில் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதினர். இப்போட்டி 42 நகர்த்தலில் 'டிரா' ஆனது. எட்டாவது சுற்றில் பிரக்ஞானந்தா-ஜெர்மனியின் வின்சென்ட் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. இப்போட்டி 64 நகர்த்தல் வரை சமநிலையில் இருந்தது. அடுத்து வின்சென்ட் செய்த தவறை சரியாக பயன்படுத்திய பிரக்ஞானந்தா, 68 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
9வது சுற்றில் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரீஸ்டை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 28 நகர்த்தலில் தோல்வியடைந்தார். 9 சுற்று முடிவில் 4 வெற்றி, 4 'டிரா' (1 தோல்வி) செய்த பிரக்ஞானந்தா, 12 புள்ளியுடன் முதலிடம் பிடித்தார். உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தாரோவ் (11), அமெரிக்காவின் சோ வெஸ்லே (10) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.
