இளவேனில் அபாரம்: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் அசத்தல்
இளவேனில் அபாரம்: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் அசத்தல்
ADDED : மே 19, 2024 11:58 PM

போபால்: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் தகுதி போட்டியில் மனு பாகர், இளவேனில் முதலிடம் பிடித்தனர்.
பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்களுக்கான தகுதி போட்டி போபாலில் நடந்தது. பெண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' 4வது சுற்று பைனலில் மனு பாகர் 240.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். தகுதிப் போட்டிக்கான பைனலில் 4வது முறையாக மனு பாகர் முதலிடம் பிடித்தார். ஏற்கனவே 25 மீ., 'பிஸ்டல்' பிரிவிலும் முதலிடம் பிடித்திருந்தார். அடுத்த இரு இடங்களை பலாக், ரிதம் சங்வான் கைப்பற்றினர்.
பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு 4வது சுற்று பைனலில் இளவேனில் 254.3 புள்ளிகளுடன் முதலிடத்தை தட்டிச் சென்றார். இது, நடப்பு உலக சாதனை புள்ளியை விட 0.3 புள்ளி அதிகம். சமீபத்தில் சீனாவின் ஹன் ஜியாயு (254.0) உலக சாதனை படைத்திருந்தார். அடுத்த இரு இடங்களை ரமிதா (253.3), மெஹுலி கோஷ் (230.3) கைப்பற்றினர்.
ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு 4வது சுற்று பைனலில் திவ்யான்ஷ் பன்வார் (253.3), அர்ஜுன் பாபுதா (250.0), ருத்ராங்க் ஷ் பாட்டீல் (229.5) முதல் மூன்று இடம் பிடித்தனர்.
ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு 4வது சுற்று பைனலில் ரவிந்தர் குமார் (242.2), வருண் தோமர் (239.4), சரப்ஜோத் சிங் (218.9) முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர்.
நான்கு சுற்றுகளில் வீரர், வீராங்கனைகளின் செயல்பாட்டை அடிப்படையாக கொண்டு, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும்.
