/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பார்முலா கார் ரேசில் முதல் தமிழ் பெண்
/
பார்முலா கார் ரேசில் முதல் தமிழ் பெண்
ADDED : செப் 02, 2024 11:36 PM

சென்னையில் நடந்த பார்முலா 4 கார் பந்தயத்தில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட ஒரே பெண் பிரியங்கா.
நீலகரி மாவட்டம் குன்னுாரைச் சேர்ந்தவர். தற்போது பெங்களூரில் பள்ளி இறுதியாண்டு படித்து வருகிறார். சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தாலும், அவரது மனம் கார் பந்தயங்களையே நாடியது.
கார் பந்தய மைதானம் தமிழகத்தில் சென்னை, கோவையில் மட்டுமே உள்ளது. பள்ளி விடுமுறையில் வீட்டிற்கு வரும்போது கோவையில் உள்ள பந்தய மைதானத்திற்கு சென்று, பயிற்சி பெற்றார். கோ-கார்ட்டில் ஆரம்பித்து இரண்டு வருடங்களில் படிப்படியாக தனது தகுதியை உயர்த்திக் கொண்டார். சர்வதேச கார் பந்தய வீரர்கள் கலந்து கொள்ளும் பார்முலா 4 கார் பந்தயத்திலும் கலந்து கொள்ளும் தகுதியினையும் பெற்றார்.
இதன் காரணமாக சென்னையில் நடந்த பந்தயத்தில் கலந்து கொண்டார். ஆண்களுக்கு சவால் விட்டு கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒரே தமிழ் பெண் பிரியங்கா மட்டுமே.இந்தப் போட்டியில் பிரியங்கா முதல் மூன்று இடத்திற்குள் வரவில்லை என்றாலும், வெற்றிகரமாக சுற்றிவந்தவர்களில் இவரும் ஒருவராவார்.
இவர் கூறுகையில்,''நான் வெற்றி பெறவிட்டாலும் வெற்றிக்கு பக்கத்தில் வந்திருக்கிறேன். வரும் காலத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு ஸ்பான்சர்கள் கிடைக்கும் பட்சத்தில் வெளிநாடுகள் சென்று போட்டிகளில் கலந்து கொண்டு தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன்,'' என்றார்.