/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சென்னையில் 'பார்முலா-4' கார்பந்தயம் கோலாகலம்
/
சென்னையில் 'பார்முலா-4' கார்பந்தயம் கோலாகலம்
ADDED : செப் 01, 2024 11:52 PM

சென்னை: சென்னையில் 'பார்முலா - 4' கார் பந்தயம் பல்வேறு தடைகளை மீறி வெற்றிகரமாக நடந்தது. சீறிப்பாய்ந்த கார்களை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரேசிங் புரோமோட்டர்ஸ் தனியார் அமைப்பும் இணைந்து, பார்முலா - 4 கார் ரேஸ், இந்தியன் ரேசிங் லீக் கார் சாம்பியன்ஷிப் போட்டியை சென்னையில் நடத்தின.
இதன் முதல் சுற்று போட்டிகள், கடந்த மாதம் 24, 25ம் தேதிகளில் சென்னைக்கு அருகே இருங்காட்டு கோட்டையில் நடந்தன. தகுதி சுற்று மற்றும் இறுதி சுற்று போட்டிகள், சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள, 3.5 கி.மீ, துார சாலையில், இரவு நேர போட்டியாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக, அண்ணா சாலை, சிவனாந்தா சாலை, காமராஜர் சாலை, கொடிமரச் சாலை ஆகியவற்றில், 19 திருப்பங்கள் மற்றும் நேர் வழிகளுடன் பந்தய பாதை அமைக்கப்பட்டது. நேற்று பயிற்சி, தகுதி சுற்று, இறுதி சுற்று போட்டிகள் நடந்தன. இதில், பெங்களூரு ஸ்பீட்ஸ்டர்ஸ், ஹைதரபாத் பிளாக்பேட்ஸ், சென்னை டர்போ ரைடர்ஸ், கோவா ஏசஸ் ஜே.ஏ., ரேசிங், பெங்கால் டைகர்ஸ், டில்லி ஸ்பீட் டெமான்ஸ் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றன.
இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, டென்மார்க், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன், மலேஷியா, போர்ச்சுக்கல், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.
தெரு நாய்களின் தொல்லையும் இருந்தது. அவற்றை வெளியேற்ற, 100க்கும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பிரதான போட்டியில், இரண்டு கார்கள் மோதிக் கொண்டன. ஒரு கார் வழியில் நின்றது. இதனால், போட்டி முடிவதற்கு தாமதம் ஏற்பட்டது.
ஒவ்வொரு அணியும், இரண்டு பந்தயங்களில் ஈடுபட்டன. ஒவ்வொரு பந்தயத்திலும், முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர்களுக்கு பரிசுகள், கேடயங்கள் வழங்கப்பட்டன. பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில், கார் சாகச நிகழ்ச்சிகளும் நடந்தன.