/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வரலாறு படைத்தார் மனு பாகர் * ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் * சரப்ஜோத் சிங் உடன் அசத்தல்
/
வரலாறு படைத்தார் மனு பாகர் * ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் * சரப்ஜோத் சிங் உடன் அசத்தல்
வரலாறு படைத்தார் மனு பாகர் * ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் * சரப்ஜோத் சிங் உடன் அசத்தல்
வரலாறு படைத்தார் மனு பாகர் * ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் * சரப்ஜோத் சிங் உடன் அசத்தல்
ADDED : ஜூலை 30, 2024 11:20 PM

சாட்டியாரக்ஸ்: ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்று வரலாறு படைத்தார் மனு பாகர். நேற்று நடந்த 10 மீ., 'ஏர் பிஸ்டல்' கலப்பு அணிகள் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் நடக்கிறது. பாரிசில் இருந்து 273 கி.மீ., துாரத்தில் உள்ள சாட்டியாரக்ஸ் என்ற இடத்தில் துப்பாக்கிசுடுதல் போட்டி நடக்கிறது. இதன் துப்பாக்கிசுடுதலில் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' கலப்பு அணிகளுக்கான பிரிவு போட்டி நடந்தது. இந்தியா சார்பில் மனு பாகர், சரப்ஜோத் சிங் இடம் பெற்ற அணி களமிறங்கியது.
முதல் நாள் நடந்த தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட மனு பாகர்-சரப்ஜோத் ஜோடி, 580 புள்ளி எடுத்து 3வது இடம் பிடித்தது. 1 புள்ளி வித்தியாசத்தில் 2வது இடத்தை இழந்து, தங்கப்பதக்கத்துக்கு போட்டியிடும் வாய்ப்பை நழுவவிட்டது.
நேற்று நடந்த வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மனு பாகர்-சரப்ஜோத் ஜோடி, 4வது இடம் பெற்ற தென் கொரியாவின் ஓ யே ஜின், வான்ஹோ ஜோடியை எதிர்கொண்டது.
போட்டி எப்படி
ஒவ்வொரு சுற்றுக்கும் 2 புள்ளி தரப்பட்டன. 16 புள்ளி எடுத்தால் பதக்கம் என்ற நிலையில், முதல் சுற்றில் தென் கொரியா 2-0 என முந்தியது. அடுத்து சிறப்பாக செயல்பட்ட மனு பாகர்-சரப்ஜோத் ஜோடி, தொடர்ந்து 4 சுற்றில் அசத்த, 8-2 என முந்தியது. 10 சுற்று முடிவில் மனு பாகர்-சரப்ஜோத் ஜோடி, 14-6 என வெற்றியை நெருங்கியது.
இந்நிலையில் தென் கொரிய ஜோடி அடுத்தடுத்து இரு சுற்றை வசப்படுத்த 10-14 என இந்தியாவை நெருங்கியது. பின் சுதாரித்துக் கொண்ட மனு பாகர்-சரப்ஜோத் ஜோடி, 13வது சுற்றை கைப்பற்றியது. முடிவில் 16-10 என வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் தட்டிச் சென்றது. ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் அணிகளுக்கான பிரிவில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இது.
ஒரே ஒலிம்பிக்கில்..
ஏற்கனவே தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்ற மனு பாகருக்கு, இது இரண்டாவது பதக்கமாக அமைந்தது. இதையடுத்து சுதந்திர இந்தியாவுக்குப் பின், ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார். முன்னதாக 1900ல் பிரிட்டிஷ்-இந்திய வம்சாவளி வீரர் நார்மன் பிரிட்சர்ட், 200 மீ., ஓட்டம், 200 மீ., தடை ஓட்டத்தில் இரு வெள்ளி வென்றிருந்தார்.
'ஏர் பிஸ்டல்' எப்படி
10 மீ., 'ஏர் பிஸ்டல்' கலப்பு அணி தகுதிச்சுற்றில் 'டாப்-4' இடம் பெறும் அணிகள் மட்டும் பதக்க போட்டிக்கு முன்னேறும்.
இதன் படி 1-2 வது இடம் பெற்ற அணிகள் தங்கம், 3-4வது இடம் பெற்ற அணிகள் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்றன.
முதல் வீராங்கனை
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்தியர் மனு பாகர். முன்னதாக அபினவ் பிந்த்ரா (தங்கம், 2008), ராஜ்யவர்தன் ரத்தோர் (வெள்ளி, 2004), விஜய் குமார் (வெள்ளி, 2012), ககன் நரங் (வெண்கலம், 2012) தலா ஒரு பதக்கம் வென்றனர்.
தவிர துப்பாக்கிசுடுதலில் இந்தியா வென்ற 6வது பதக்கம் (1 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம்) ஆனது. இதற்கு முன் அதிகபட்சமாக ஹாக்கியில் 12 (8 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம்), மல்யுத்தத்தில் 7 பதக்கம் (2 வெள்ளி, 5 வெண்கலம்) வென்றது இந்தியா.
மூன்றாவது இந்தியர்
ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் ஆனார் மனு பாகர். இதற்கு முன் மல்யுத்தத்தில் சுஷில் குமார் (2008ல் வெண்கலம், 2012ல் வெள்ளி), பாட்மின்டனில் சிந்து (2016ல் வெள்ளி, 2021ல் வெண்கலம்) இரு பதக்கம் வென்றிருந்தனர்.
பிரித்விராஜ் '21'
ஆண்களுக்கான துப்பாக்கிசுடுதல் 'டிராப்' பிரிவு தகுதிச்சுற்று நடந்தன. தமிழகத்தின் பிரித்விராஜ் 37, பங்கேற்றார். தனது முதல் ஒலிம்பிக்கில் களமிறங்கிய இவர், இரண்டு நாள் நடந்த தகுதிச்சுற்றில் 118 புள்ளி எடுத்து 21வது இடம் பிடித்து ஏமாற்றினார்.
ராஜேஸ்வரி, ஸ்ரேயாசி ஏமாற்றம்
பெண்களுக்கான துப்பாக்கிசுடுதல் 'டிராப்' பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியா சார்பில் ராஜேஸ்வரி, ஸ்ரேயாசி பங்கேற்றனர். முதல் நாள் முடிவில் இருவரும் தலா 68 புள்ளி எடுத்து, 21, 22வது இடத்தில் உள்ளனர்.
அடுத்து எப்போது
டோக்கியோ ஒலிம்பிக்(2021) தகுதிச்சுற்றில் மனு பாகரின் துப்பாக்கி சரியாக வேலை செய்யாமல் போக, ஏமாற்றத்தை சந்தித்தார். இதிலிருந்து மீண்ட இவர், இம்முறை 2 பதக்கம் வென்று சாதித்துள்ளார். அடுத்து ஆக. 2ல் 25 மீ., பிஸ்டல் பிரிவில் களமிறங்க உள்ளார்.
பிரதமர் பாராட்டு
பிரதமர் மோடி வெளியிட்ட பாராட்டு செய்தியில்,' நமது துப்பாக்கிசுடுதல் நட்சத்திரங்கள் தொடர்ந்து நாம் பெருமைப்படச் செய்கின்றனர். கலப்பு பிரிவில் வெண்கலம் வென்ற மனுபாகர், சரப்ஜோத் சிங்கிற்கு பாராட்டுகள். இந்தியர்கள் நம்பமுடியாத மகிழ்ச்சியில் உள்ளனர். இதில் மனு பாகர் தொடர்ந்து இரண்டாவது பதக்கம் வென்றுள்ளார். இது அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது,' என தெரிவித்துள்ளார்.