/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பிரமோத் பகத்துக்கு 18 மாதம் தடை * பறிபோனது பாராலிம்பிக் வாய்ப்பு
/
பிரமோத் பகத்துக்கு 18 மாதம் தடை * பறிபோனது பாராலிம்பிக் வாய்ப்பு
பிரமோத் பகத்துக்கு 18 மாதம் தடை * பறிபோனது பாராலிம்பிக் வாய்ப்பு
பிரமோத் பகத்துக்கு 18 மாதம் தடை * பறிபோனது பாராலிம்பிக் வாய்ப்பு
ADDED : ஆக 13, 2024 11:24 PM

புதுடில்லி: ஊக்கமருந்து சோதனையை தவிர்த்த, பிரமோத் பகத்துக்கு 18 மாதம் தடை விதிக்கப்பட்டது. இவர் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாது.
இந்திய பாரா பாட்மின்டன் சீனியர் வீரர் பிரமோத் பகத் 36. பீஹாரை சேர்ந்தவர். உலகின் 'நம்பர்-3' வீரர். சிறுவயதில் போலியோ காரணமாக இவரது இடது கால் பாதிக்கப்பட்டது. டோக்கியோ பாராலிம்பிக்கில் (2021) எஸ்.எல்.3 பிரிவில் தங்கம் (ஒற்றையர்) வென்றிருந்தார். அடுத்து பாரிஸ் பாராலிம்பிக் (ஆக. 28-செப். 8) போட்டிக்கு தயாராகி வந்தார்.
இவர், போட்டி இல்லாத நாளில் நடத்தப்படும் ஊக்கமருந்து சோதனையை அடுத்தடுத்து மூன்று முறை தவிர்த்து வந்துள்ளார்.
இதையடுத்து பிரமோத் பகத், போட்டிகளில் பங்கேற்க சர்வதேச பாரலிம்பிக் கமிட்டி 18 மாதம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து பாட்மின்டன் உலக கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) வெளியிட்ட அறிக்கையில்,'ஊக்கமருந்து தடுப்பு பிரிவின் சோதனை விதிகளை கடந்த 12 மாதத்தில் மூன்று முறை மீறியுள்ளார் பிரமோத் பகத். இதனால், டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியன் ஆன இவருக்கு 18 மாதம் தடை விதிக்கப்படுகிறது. இது 2025, செப். 1 வரை இருக்கும் என்பதால், பாரிஸ் பாராலிம்பிக்கில் பங்கேற்க முடியாது,'என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடினமான முடிவு
பிரமோத் பகத் கூறுகையில்,''இது கடினமான முடிவு. உலக ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் முடிவை மதிக்கிறேன். அனைத்து நட்சத்திரங்களும் இதன் விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். சில நேரங்களில் தடை என்பது சரியான தீர்வாக இருக்காது.
தடை செய்யப்பட்ட எந்த பொருளையும் நான் பயன்படுத்தவில்லை. சோதனை செய்து கொள்ளவில்லை என்பது தான் இங்கு பிரச்னை. வெவ்வேறு இடங்களில் இருந்ததால் தான் சோதனையை தவிர்க்க நேரிட்டது. மூன்றாவது முறை சோதனையை தவிர்த்ததன், காரணங்களையும் தெரிவித்து விட்டேன். பாரிஸ் பாராலிம்பிக் போட்டிக்கு தயாராகி வந்த நேரத்தில் தடை விதித்தது எனக்கு பெரிய இழப்பு,''என்றார்.
'அப்பீல்' நிராகரிப்பு
பிரமோத் பகத் ஒரு ஆண்டாக சோதனையை தவிர்த்தது குறித்து கடந்த மார்ச் 1ல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அப்பீல் செய்துள்ளார். இருப்பினும் அவரது தகுதி நீக்க காலம் துவங்கி விட்டதால், பிரமோத் பகத் அப்பீல் நிராகரிக்கப்பட்டது.

