/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஒலிம்பிக்கில் பிரவீன் சித்ரவேல்
/
ஒலிம்பிக்கில் பிரவீன் சித்ரவேல்
ADDED : ஜூலை 03, 2024 10:41 PM

புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார் பிரவீன் சித்ரவேல்.
பிரான்சில் பாரிசில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26-ஆக. 11ல் நடக்கவுள்ளது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) தங்கம் வென்று வரலாறு படைத்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, அவினாஷ் சபிள் ('ஸ்டீபிள் சேஸ்'), லவ்லினா, நிகாத் ஜரீன் (குத்துச்சண்டை), பாட்மின்டனில் சிந்து, லக்சயா, சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி உள்ளிட்டோர் திறமை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.
இதனிடையே தரவரிசை அடிப்படையில் தகுதி பெற்றோர் விபரம் வெளியானது. இதன்படி தமிழகத்தின் 'டிரிபிள் ஜம்ப்' வீரர் பிரவீன் சித்ரவேல், உலகளவில் 23வது இடம் பெற்று, பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார். 2022 பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டில் 17.02 மீ., துாரம் தாண்டி வெள்ளி வென்ற 'டிரிபிள் ஜம்ப்' வீரர் அப்துல்லா அபூபக்கர், 21வது இடம் பிடித்து, ஒலிம்பிக் தகுதி பெற்றார். இருவரும் தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்டு, பைனலுக்கு முன்னேற முயற்சிக்கலாம்.
அன்னு தகுதி
ஈட்டி எறிதல் வீராங்கனை அன்னு ராணி. 60 மீ.,க்கும் மேல் எறிந்த முதல் இந்திய வீராங்கனை என கடந்த 2017ல் சாதித்தார். 2023 ஆசிய விளையாட்டில், 62.92 மீ., துாரம் எறிந்து தங்கம் கைப்பற்றினார். இவர், உலகத் தரவரிசையில் 21வது இடம் பெற்று, பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார்.
தவிர குண்டு எறிதல் வீரர் தஜிந்தர்பால் சிங் (23வது இடம்), வீராங்கனை அபா கதுவா (23வது), தடகள வீராங்கனை ஜோதி (34வது), 5000 மீ., ஓட்ட வீராங்கனை பாருல் சவுத்ரி (34வது), உயரம் தாண்டுதல் வீரர் சர்வேஷ் (23வது) தரவரிசை அடிப்படையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றனர்.