ADDED : அக் 22, 2025 10:07 PM

புதுடில்லி: புரோ கபடி லீக் போட்டியில் அசத்திய ஹரியானா அணி 45-34 என, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. இதுவரை புனே, டில்லி, தெலுங்கு டைட்டன்ஸ், மும்பை, பெங்களூரு, 'நடப்பு சாம்பியன்' ஹரியானா, ஜெய்ப்பூர் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கான இடத்தை உறுதி செய்தன. மீதமுள்ள ஒரு இடத்துக்கு, தமிழ் தலைவாஸ், பாட்னா, குஜராத், உ.பி., பெங்கால் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
டில்லியில் நடந்த லீக் போட்டியில் ஹரியானா, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் ஹரியானா அணி 21-20 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய ஹரியானா அணியினர், தெலுங்கு டைட்டன்ஸ் வீரர்களை இரு முறை 'ஆல்-அவுட்' செய்தனர். முடிவில் ஹரியானா அணி 45-34 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஹரியானா அணிக்கு வினய் (11 புள்ளி), ஷிவம் படாரே (8) கைகொடுத்தனர். தெலுங்கு டைட்டன்ஸ் சார்பில் 'ஆல்-ரவுண்டர்' பாரத் 16 புள்ளி பெற்றார்.
இதுவரை விளையாடிய 18 போட்டியில், 10 வெற்றி, 8 தோல்வி என, 20 புள்ளிகளுடன் ஹரியானா அணி 4வது இடத்துக்கு முன்னேறியது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி (20 புள்ளி) 3வது இடத்தில் உள்ளது.
மற்றொரு லீக் போட்டியில் பெங்களூரு அணி 54-24 என பெங்கால் அணியை வீழ்த்தியது.