ADDED : பிப் 20, 2024 10:29 PM

பஞ்ச்குலா: புரோ கபடி லீக் தொடரில் மும்பை, தெலுங்கு டைட்டன்ஸ் மோதிய போட்டி 45-45 என சமனில் முடிந்தது.
இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் 'டாப்-6' இடம் பிடித்த ஜெய்ப்பூர் (92 புள்ளி), புனே (91), டில்லி (79), குஜராத் (70), ஹரியானா (70), பாட்னா (69) அணிகள் அரையிறுதி 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறின.
இம்முறையும் ஏமாற்றிய தமிழ் தலைவாஸ் அணி மொத்தம் பங்கேற்ற 22 போட்டியில் 9 வெற்றி மட்டும் பெற்று (13 தோல்வி), 51 புள்ளியுடன் 8 வது இடத்துக்கு தள்ளப்பட்டது. நேற்று ஹரியானாவின் பஞ்ச்குலாவில் நடந்த லீக் போட்டியில் மும்பை, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இரு அணிகளும் மாறி மாறி புள்ளி எடுக்க, முதல் பாதி 19-19 என சமனில் முடிந்தது. இரண்டாவது பாதியில் மும்பை அணி ஒரு கட்டத்தில் 32-22 என முன்னிலை பெற்றது. இருப்பினும் கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட தெலுங்கு டைட்டன்ஸ் அணி போட்டியை 45-45 என சமன் ('டை') செய்து அசத்தியது.

