/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சோகத்தில் விடைபெற்றார் வினேஷ் போகத்
/
சோகத்தில் விடைபெற்றார் வினேஷ் போகத்
ADDED : ஆக 08, 2024 11:23 PM

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத், மல்யுத்த அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார்.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் பிரீஸ்டைல், 50 கிலோ பிரிவில் வினேஷ் போகத், 29, பங்கேற்றார். இதில் அசத்திய இவர், ஒலிம்பிக் மல்யுத்த பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார்.
பைனல் நடப்பதற்கு முன் இவரது எடை சோதிக்கப்பட்டது. இதில் நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோ எடையைவிட 100 கிராம் கூடுதலாக இருந்ததால், தகுதிநீக்கம் செய்யப்பட்டார். சர்வதேச மல்யுத்த விதிமுறைப்படி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டார். இதை எதிர்த்து இந்தியா சார்பில் 'அப்பீல்' செய்தும் பலன் கிடைக்கவில்லை. எடை தொடர்பான விதிமுறையை மாற்ற முடியது என ஒருங்கிணைந்த மல்யுத்த கூட்டமைப்பு தெரிவித்துவிட்டது.
இதையடுத்து தனக்கு வெள்ளிப்பதக்கத்தை பகிர்ந்து அளிக்க வேண்டுமென சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்திடம் வினேஷ் சார்பில் 'அப்பீல்' செய்யப்பட்டுள்ளது. இதன் மீது விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
சாராவுக்கு தங்கம்
இதற்கிடையே நேற்று நடந்த 'பிரீஸ்டைல்' 50 கிலோ பிரிவு பைனலில் அமெரிக்காவின் சாரா ஆன் ஹில்டிபிரான்ட், அரையிறுதியில் வினேஷிடம் தோற்ற கியூபாவின் குஸ்மன் லோபஸ் மோதினர். இதில் வெற்றி பெற்ற சாரா தங்கம் கைப்பற்றினார். லோபசிற்கு வெள்ளி கிடைத்தது.
அம்மாவிடம் உருக்கம்தனது ஒலிம்பிக் பதக்க கனவு கடைசி தருணத்தில் தகர்ந்த சோகத்தில் இருந்த வினேஷ் போகத், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்தார். இவர் தனது அம்மா பிமேலதாவுக்கு உருக்கமாக வெளியிட்ட செய்தியில்,'அம்மா, என்னை மல்யுத்தம் ஜெயித்துவிட்டது. நான் தோற்றுவிட்டேன். உங்கள் கனவுகள், எனது தைரியம் எல்லாம் தகர்ந்துவிட்டன. இனியும் போராட என்னிடம் பலம் இல்லை. மல்யுத்த போட்டிக்கு (2001-2024) 'குட்-பை' சொல்கிறேன். அனைவருக்கும் கடமைப்பட்டுள்ளேன். என்னை மன்னிக்கவும்,' என தெரிவித்துள்ளார்.
'வெள்ளி' கவுரவம்ஹரியானாவை சேர்ந்தவர் வினேஷ் போகத். இவரை பாராட்டி, ஹரியானா முதல்வர் நயாப் சிங் செய்னி வெளியிட்ட செய்தியில்,''பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் சிறப்பாக செயல்பட்டார். சில காரணங்களால் பைனலில் பங்கேற்க முடியவில்லை. இவருக்கு வெள்ளிப்பதக்கம் வென்றவருக்கு உரிய பரிசு, கவுரவம் அளிக்கப்படும்,'என தெரிவித்துள்ளார்.