ADDED : ஜூலை 24, 2026 10:57 PM

புதுடில்லி: 'பிடே' அமைப்பின் இடைக்கால தலைவராக இந்தியாவின் ஆனந்த் நியமிக்கப்பட்டார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் ('பிடே') தலைவராக ரஷ்யாவின் ஆர்காடி டிவோர்கோவிச் 54, இருந்தார். ரஷ்ய துணை பிரதமராக (2012-2018) இருந்த டிவோர்கோவிச், 2018ல் 'பிடே' தலைவரானார். கடந்த 2022ல் 'பிடே' துணை தலைவராக, 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 56, நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ரஷ்யா-உக்ரைன் போரில் தொடர்புடையவர்கள் மீது ஐரோப்பிய யூனியன் தடைவிதித்துள்ளது. ஐரோப்பிய யூனியன் சார்பில் வெளியான தடைவிதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் டிவோர்கோவிச் இடம் பெற்றுள்ளார். இதனையடுத்து 'பிடே' அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து டிவோர்கோவிச் விலகினார். இவருக்கு பதிலாக இந்தியாவின் ஆனந்த், இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார். இதன்மூலம் 'பிடே' தலைவரான முதல் இந்தியரானார் ஆனந்த்.
ஆனந்த் வெளியிட்ட செய்தியில், 'டிவோர்கோவிச்சுக்கு தடை விதிக்கப்பட்டதால், 'பிடே' அமைப்பின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்று உள்ளேன். இவரது தலைமை பண்புக்கும், அர்ப்பணிப்புக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உலக அளவில் செஸ் போட்டியின் வளர்ச்சியில் முழுக்கவனம் செலுத்துவேன். டிவோர்கோவிச் உருவாக்கி உள்ள ஒரு வலுவான குழுவையும், அவரது தொலைநோக்கு பார்வைகளையும் முன்னோக்கி எடுத்துச் செல்வேன்,' என, தெரிவித்திருந்தார்.
