ADDED : செப் 11, 2026 11:09 PM

புதுடில்லி: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தகுதி போட்டியில் பங்கேற்க வினேஷ் போகத்திற்கு டில்லி உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
கஜகஸ்தானின் அஸ்தானாவில், உலக சீனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் வரும் அக். 24 முதல் நவ. 1 வரை நடக்க உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள 6 பிரிவுகளில் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்களுக்கான தகுதிப் போட்டி, செப். 14ல் டில்லியில் நடக்க உள்ளது.
இதற்காக பல்வேறு தகுதிகளை இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) நிர்ணயித்தது. இதை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 32, வழக்கு தொடர்ந்தார்.
தவிர, விளையாட்டு வீராங்கனைகள் கர்ப்பம், குழந்தை பேறுக்கு பின், மீண்டும் போட்டிக்கு திரும்புவது குறித்து புதிய கொள்கை வகுக்க வேண்டும்,' என ஏற்கனவே இவர் தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இதனிடையே, தகுதி போட்டி வழக்கு, நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நீதிமன்ற உத்தரவில்,''தகுதி போட்டி சம்பந்தமாக டபிள்யு.எப்.ஐ., வெளியிட்ட விதிமுறைகள் அனைவருக்கும் பொதுவானது. புதிய கொள்கை குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படாமல் உள்ளது. மனுதாரருக்கு மட்டும் இடைக்கால நிவாரணம் வழங்குவது, ஏற்கனவே இதுபோன்ற சூழலில் இருந்து, நீதிமன்றத்தை அணுக முடியாத நிலையில் உள்ளவர்களை, சமமற்ற முறையில் நடத்துவது போல் ஆகிவிடும். இதனால் வினேஷ் போகத்திற்கு இடைக்கால நிவாரணம் வழங்க விரும்பவில்லை,'என தெரிவிக்கப்பட்டுள்ளது.
