ADDED : மே 05, 2024 11:18 PM

காக்லியரி: ஏ.டி.பி., சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஜெர்மனியின் பெய்ஜ்மான் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
இத்தாலியில் ஆண்களுக்கான ஏ.டி.பி., சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஜெர்மனியின் ஆன்ட்ரி பெய்ஜ்மான் ஜோடி, பொலிவியாவின் பெடரிகோ செபாலோஸ், போரிஸ் அரியாஸ் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய இந்தியா-ஜெர்மனி ஜோடி, 'டை பிரேக்கர்' வரை சென்ற இரண்டாவது செட்டை 6-7 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 'சூப்பர் டை பிரேக்கரில்' எழுச்சி கண்ட பாலாஜி ஜோடி 10-6 என வென்றது.
ஒரு மணி நேரம், 55 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய பாலாஜி, பெய்ஜ்மான் ஜோடி 6-4, 6-7, 10-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.