ADDED : ஜூன் 28, 2026 11:51 PM

லண்டன்: விம்பிள்டன் டென்னிசில் இத்தாலியின் ஜானிக் சின்னர் மீண்டும் கோப்பை வென்று சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தின் லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் 139வது சீசன் இன்று துவங்குகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கோப்பை வெல்ல இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது.
'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கும் சின்னர், மீண்டும் சாதித்தால் தனது 5வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றலாம். ஜோகோவிச் அசத்தினால், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 25 பட்டம் வென்று முதல் டென்னிஸ் நட்சத்திரமாகலாம். சமீபத்திய பிரெஞ்ச் ஓபனில், தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஸ்வெரேவ், விம்பிள்டனில் முதல் கோப்பை வெல்ல முயற்சிக்கலாம். ஸ்பெயினின் அல்காரஸ், காயத்தால் விலகினார்.
செரினா வருகை: பெண்கள் ஒற்றையரில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் 44, மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஓய்வு முடிவை திரும்ப பெற்ற இவர், 4 ஆண்டுகளுக்கு பின் விம்பிள்டனில் களமிறங்குகிறார். இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள செரினா, தனது முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் மாயாவை சந்திக்கிறார்.
பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, 'நடப்பு சாம்பியன்' போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, அமண்டா அனிசிமோவா, கோகோ காப் உள்ளிட்டோரும் கோப்பை வெல்ல முயற்சிக்கலாம்.
ஒற்றையரில் கோப்பை வெல்லும் வீரர்/வீராங்கனைக்கு ரூ. 44.80 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். பைனல் வரை சென்று 2வது இடம் பிடிப்பவருக்கு ரூ. 22.40 கோடி பரிசாக கிடைக்கும்.
