/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கைவினைஞர்களுக்கு விருது விண்ணப்பிக்க அழைப்பு
/
கைவினைஞர்களுக்கு விருது விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : மே 19, 2024 01:13 AM
மாமல்லபுரம்:மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ், கைவினை வளர்ச்சி ஆணைய நிர்வாகம் இயங்கி வருகிறது. இந்நிர்வாகம், ஆண்டுதோறும் கைவினைத் தொழில்களில் ஈடுபட்டுள்ள சிறந்த கைவினைஞர்களுக்கு, விருது வழங்கி கவுரவிக்கிறது.
கடந்த 2023ம் ஆண்டுக்கான விருதுகள் பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. 'சில்ப குரு' விருது, கைவினை வகையில் ஐந்து பேர், பிரத்யேகமாக பெண் ஒருவர் என, ஆறு பேருக்கு வழங்கப்பட உள்ளது.
மேலும், உலோகம், தச்சு, பிரம்பு - மூங்கில் - பிற வனப் பொருட்கள், கல் பொருட்கள், மண் - செராமிக்ஸ் - டெரகோட்டா, பெயின்டிங்ஸ், நகை - செமி விலை மதிப்பற்ற ஜெம்ஸ் ஸ்டோன், காகிதம் - இயந்திர காகிதம், துணி வகைகள், கையால் தயாரிக்கப்பட்ட தரைவிரிப்பு - கம்பளம் - டர்ரீஸ், பொம்மைகள் - விளையாட்டு காற்றாடிகள் ஆகிய கைவினைப் பொருட்கள் பிரிவுகளில், கைவினைஞர்களுக்கு, தலா ஒரு தேசிய விருது வழங்கப்படுகிறது.
இதர கைவினைப் பொருட்கள், பெண் கைவினைஞர், 30 வயதிற்குட்பட்ட இளம் கைவினைஞர், மாற்றுத்திறனாளி கைவினைஞர், பழங்குடி கைவினைஞர்கள் ஆகிய பிரிவுகளிலும், தலா ஒருவருக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது.
வடிவமைப்பில் புதுமை, தொழில் முனைவோர் மற்றும் தயாரிப்பாளர் நிறுவனம் ஆகிய பிரிவுகளிலும், தலா ஒரு தேசிய விருது என, மொத்தம் 19 விருதுகள் வழங்கப்படுகிறது.
தகுதி, வயது, அனுபவம், விண்ணப்பித்தல் உள்ளிட்ட விபரங்களை, ஆணையர் அலுவலகத்தின் www.handicrafts.nic.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
இத்தளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கி, முழுமையாக பூர்த்தி செய்து, அருகில் உள்ள கைவினை சேவை மையத்தில், ஜூன் 20க்குள் அளிக்க வேண்டும் என, நிர்வாகம் அறிவித்துள்ளது.

