/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் கேட்டதாக செய்யூர் எம்.எல்.ஏ., மீது வழக்கு
/
ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் கேட்டதாக செய்யூர் எம்.எல்.ஏ., மீது வழக்கு
ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் கேட்டதாக செய்யூர் எம்.எல்.ஏ., மீது வழக்கு
ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் கேட்டதாக செய்யூர் எம்.எல்.ஏ., மீது வழக்கு
ADDED : செப் 15, 2024 01:26 AM

செய்யூர்:சாலை அமைக்கும் திட்டத்திற்காக, லஞ்சம் கேட்டதாக தொடரப்பட்ட வழக்கில், செய்யூர் தொகுதி வி.சி., - எம்.எல்.ஏ., பாபு உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சித்தாமூர் அருகே புத்திரன்கோட்டை- - மாம்பாக்கம் இடையே, 2.3 கி.மீ., நீளமுடைய சாலை உள்ளது. இதை அகரம், ஈசூர், புத்திரன்கோட்டை உள்ளிட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து, ஜல்லிக்கற்கள் சிதறி காணப்படுவதால், தினமும் பள்ளி, கல்லுாரிகள் மற்றும் விவசாய வேலைக்கு செல்வோர் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதை தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலையை சீரமைக்க, கடந்தாண்டு ஜன., 30ல், நபார்டு வங்கி நிதியுதவியின் கீழ், 3.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டில் சாலை அமைக்கும் பணி துவங்கியது.
இந்நிலையில், ஆகஸ்டில் சாலை பணி திடீரென நிறுத்தப்பட்டது. கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியால், வாகன ஓட்டிகள் மற்றும் பகுதி மக்கள் மீண்டும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சாலை பணியை செய்யவிடாமல், செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாபு, புத்திரன்கோட்டை ஊராட்சி தலைவர் நிர்மல்குமார் மற்றும் மாம்பாக்கம் ஊராட்சி தலைவரின் கணவர் ராமையா ஆகியோர், லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக, ஒப்பந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவிக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. மனு குறித்து பதிலளிக்க, செய்யூர் எம்.எல்.ஏ., பாபு, புத்திரன்கோட்டை ஊராட்சி தலைவர் நிர்மல்குமார், மாம்பாக்கம் ஊராட்சி தலைவரின் கணவர் ராமையா ஆகியோருக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.