
மாநில நெடுஞ்சாலை சேதம்
அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சூணாம்பேடு பஜார் பகுதி நியாய விலை கடை எதிரே மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே, மூன்று மாதங்களுக்கு முன் குடிநீர் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு, மண் கொட்டி மூடப்பட்டது.
அந்த இடத்தில், தற்போது வரை சாலை அமைக்கப் படாமல் உள்ளதால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சேதமடைந்த சாலையில் சிக்கி விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ப.கார்த்திகேயன்
சூணாம்பேடு.
பணியாளர்கள் வராததால்
தேங்கும் குப்பை கழிவுகள்
காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், ஊராட்சி சார்பில் குப்பை சேகரிக்க துாய்மை பணியாளர்கள் வருவதில்லை.
இதுதொடர்பாக, ஊராட்சி மன்ற தலைவருக்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குப்பை சேகரிக்க, தூய்மை பணியாளர்களை முறையாக அனுப்ப, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.காயத்ரி, நெடுங்குன்றம்.
சேதமான தண்ணீர் தொட்டி
சீரமைக்க எதிர்பார்ப்பு
தாம்பரம் மாநகராட்சியின் நான்காவது மண்டலம், 56வது வார்டுக்கு உட்பட்ட பழைய பெருங்களத்தூரில் உள்ள சிவசண்முகம் தெருவில், சமூக நலக்கூடம் உள்ளது.
இந்த தெருவின் பின்புறத்தில், இப்பகுதி வாசிகளின் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தொட்டி பழுதடைந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, இப்பகுதியில் சேதமடைந்துள்ள குடிநீர் தொட்டியை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எல்.கணபதி,
பழைய பெருங்களத்தூர்.
ஒரத்தி பேருந்து நிலையத்தில்
அடிப்படை வசதிகள் தேவை
மதுராந்தகம் தாலுகா அச்சரப்பாக்கம் பேரூராட்சி அடுத்துள்ள ஒரத்தியில் பேருந்து நிலையம் உள்ளது. இங்கு பயணியருக்கு குடிநீர், கழிப்பறை மற்றும் இருக்கை வசதிகள் போன்ற எந்தவித அடிப்படைவசதிகளும் இல்லை.
மேலும், இந்த பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாகவும், போக்குவரத்திற்கு லாயக்கற்ற முறையில் உள்ளது.
எனவே, ஒரத்தி பேருந்து நிலையத்தை சீரமைத்து, பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.கிருஷ்ணன்,
ஒரத்தி, மதுராந்தகம்.
சாலையோரம் பள்ளம்
சீரமைப்பது எப்போது?
காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், அகரம்தென் ஊராட்சி, வெங்கம்பாக்கம்- வண்டலூர் நெடுஞ்சாலையில் சாலையோரம் நீண்ட தூரத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைத்து, வாகன ஓட்டிகள் சீராக செல்வதற்கு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.கவிதா, வெங்கம்பாக்கம்.
கொளத்தாஞ்சேரி சாலையில்
மணல் திட்டுகளால் அச்சம்
காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் கொளத்தாஞ்சேரி -- கரும்பாக்கம் செல்லும் சாலையில், கொளத்தாஞ்சேரி பகுதியில் 1 கி.மீ., தூரம் சாலை முழுதும் மணல் திட்டுக்கள் குவிந்து காணப்படுகிறது.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி வழுக்கி விழுந்து சிறு சிறு காயமடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மணல் திட்டுக்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.கோவிந்தன், பாலூர், காட்டாங்கொளத்தூர்.

