/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிலாவட்டத்தில் நவீன நெல் சேமிப்பு தளம் ரூ.14.5 கோடியில் கட்டுமான பணி வேகம்
/
சிலாவட்டத்தில் நவீன நெல் சேமிப்பு தளம் ரூ.14.5 கோடியில் கட்டுமான பணி வேகம்
சிலாவட்டத்தில் நவீன நெல் சேமிப்பு தளம் ரூ.14.5 கோடியில் கட்டுமான பணி வேகம்
சிலாவட்டத்தில் நவீன நெல் சேமிப்பு தளம் ரூ.14.5 கோடியில் கட்டுமான பணி வேகம்
ADDED : ஆக 08, 2024 02:12 AM

மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் சுற்று வட்டாரப் பகுதிகளில், விவசாயமே பிரதான தொழில். இப்பகுதியில், கிணற்று பாசனம் மற்றும் ஏரி பாசனம் வாயிலாக, விவசாயிகள் நெல், கரும்பு, வேர்க்கடலை மற்றும் தோட்டக்கலை பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.
இதில், பருவ மழை காலங்களில், நெல் விவசாயம் செய்வதில், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாக, மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட அச்சிறுபாக்கம், ராமாபுரம், வேடந்தாங்கல், ஒரத்தி, எல்.எண்டத்துார் உள்ளிட்ட பகுதிகளில், 30,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில், நெல் விவசாயம் செய்கின்றனர்.
30,000 டன் நெல்
விவசாயிகளிடமிருந்து மத்திய அரசின் நெல் கொள்முதல் நிலையம் மற்றும் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வாயிலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், விவசாயிகளிடமிருந்து 30,000 டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த நெல் மூட்டைகள், சிலாவட்டம் மற்றும் அண்டவாக்கம் பகுதிகளில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் சேமிக்கப்படுகின்றன.
தரைப்பகுதியில் நெல் மூட்டைகள் வீணாகாதவாறு கற்கள் மற்றும் சவுக்கு கட்டைகள் அடுக்கப்பட்டு, நெல் மூட்டைகளை பாலித்தீன் தார்பாய்களால் மூடி பாதுகாத்து, லாரிகள் வாயிலாக தென் மாவட்டங்களில் உள்ள அரவை மில்களுக்கு, செங்கல்பட்டில் இருந்து ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
தற்காலிகமாக நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பதற்கு பதிலாக, கூரை அமைக்கப்பட்ட நிரந்தர நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
பணிகள் விறுவிறு
இதனால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பாக, மதுராந்தகம் அடுத்த சிலாவட்டத்தில், 15,000 டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு தளம் கட்டுமான பணிகள், சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டன.
நபார்டு வங்கி நிதி உதவியுடன், 14.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தலா 3,000 டன் கொள்ளளவு கொண்ட, ஐந்து மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன சேமிப்பு தளம் கட்டுமான பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
கட்டுமானப் பணிகள், இன்னும் ஆறு மாத காலத்திற்குள் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.